Tuesday, November 17, 2015

தூங்காவனம்

முதலிலேயே சொல்லிவிடுகிறேன் நான் ப்ரென்ச் படம் பார்க்கவில்லை - தமிழில் படம் பட்டாசு.  கடலில் நீந்தி நொங்கெடுக்கிற திமிங்கலத்தைக் கொண்டு வந்து  ஸ்விமிங் பூலில் நீந்தச் சொல்லி ஷோ காட்டியிருக்கிறார்கள்.  கமல் எனும் ஒரு ஆளுமைக்கு இதெல்லாம் ஜுஜூபி.

பிடித்தவை பிடிக்காதவை பிடித்துப் பிடிக்காதவை பிடிக்காமல் பிடித்தவை பிடிக்கவே பிடிக்காதவை
---------------------------------------------------------------
லாலாலா என்று ஆரம்பித்து மெயின் ப்ளாட்டுக்கு வராமல் வண்டியை நேரே நடு கூடத்தில் மோதி கதையை முதல் காட்சியிலேயே ஆரம்பித்திருக்கிறார்கள்.

கமல் காலேஜ் முடித்து நான்கு ஆண்டுகள் தான் ஆகிறது என்று காட்டாமல் நரைத்த தாடியோடு வலம் வருகிறார். அஜீத் வாழ்க. என்னுடைய தனிப்பட்ட ஆசை  - கமலின் இந்த மாதிரி வயதொத்த பாத்திரங்களுக்கு தறகாலத் தமிழுலகில் செம தீனியிருக்கிறது. இதற்கு இயக்குனர்கள் கதை செதுக்கவேண்டும் (ஹிந்தியில் அமிதாப் செய்வது மாதிரி). அப்புறம் பாருங்கள் அட்டகாசத்தை

பாட்டு போட்டு படத்தை தொய்ய விடாமல் கடைசியில் பாட்டைப் போடுகிறார்கள்.

திரிஷாவை பிடித்த மிக அரிய படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். படம் முழுக்க - முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு வருவதாலா என்று தெரியவில்லை.

மச்சம் வைத்தால் தான் வில்லன்கள் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்ற மரபை உடைத்து பக்கதில் குளு குளுவென்று இருக்கும் பெண்ணை குமுக்கென்று கவ்வி லபக்கென்று முத்தம் குடுத்து வில்லன்கள் கண்களில் மண்ணைத் தூவுகிறார் தல. ஆனால் கேமிரா ஆங்கிள் சரியில்லை. வெளிச்சமே இல்லாத இடத்தில்
பழைய சினிமா டெக்னிக்கில் பின்னால் இருந்தும் காட்டும் போது தலை மட்டும் தான் தெரிகிறது கமல் உம்மா குடுக்கிறாரா இல்லை சும்மா குடுக்கிறாரா என்று சரிவரத் தெரியவில்லை. இதில் வேறு ஆயிரத்தெட்டு பேர் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார்கள். என்னைய்யா அவசரம்? மது ஷாலினியாம்.

இன்சொமேனியா கடை மொதலாளிக்கு பணக் கஷ்டம் என்பதால் கடையில் பாதி லைட் எரியமால் இருட்டில் யுவதிகள் காதுக்கு பின்னாடி யுவன்கள் என்னத்தையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள். மற்றவரகள் பக்கத்திலிருப்பவர்களுக்கு டிஸ்டர்ப் ஆகுமே என்று வாய்க்குள்ளேயே வாய் வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடை அட்ரஸ நோட் பண்ணு நோட் பண்ணு சென்னை...ஈ.சி.ஆர் மெயின் ரோடு சென்னை. சொக்கா சொக்கா

கமலுக்கும் திரிஷாவுக்கும்  காதல் இல்லை. சண்டை போடுகிறார்கள். அதிலும் காலுக்குள் கால் விட்டுப் பின்னி ஏடாகூடமாய் கிடுக்கிப் பிடியெல்லாம் போட்டு சண்டை நடக்கும் போது "வாட் இஸ் ஹாப்பனிங் ஹியர்" என்று நமக்கு டவுட்டு வரக் கூடாது என்று போகிற போக்கில் திரிஷாவை தல கூட ரெண்டு சாத்து சாத்துகிறார். பார்க்கிற நமக்கே வலிக்கிறது. பாவம் சிஸ்டர் திரிஷா.

பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர் என்று விலன்களில் ஹெவி வெயிட் காட்டியிருக்கிறார்கள்.  அதனாலோ என்னவோ யார் மெயின் வில்லன் என்று சரிவர மனதில் பதியவில்லை. பிரகாஷ் ராஜ் சிரிப்பு வில்லன் போலும். நிறைய இடங்களில் கெக்கப்பிக்குகிறார்.

ஆஷா சரத் இந்தப் படத்திலும் பையன் வீட்டுக்கு வந்தாச்சா என்று போனில் விசனப் பட்டுக் கொண்டிருக்கிறார்.

திருவல்லிக்கேணி மேன்ஷனுக்குள் புகுந்தது மாதிரி எந்தப்பக்கம் கதவைத் திறந்து போனாலும் வந்த இடத்திலேயே சுத்தி சுத்தி வருகிறார்கள். ஆனால் கதை நகருகிற வேகத்தில் அதெல்லாம் ரொம்பத் தெரியவில்லை.

டிக்கட் பைசா வசூல் க்யாரண்டி. கர்ப ஸ்திரீகளும் குழந்தைகளும் ஒரு வேளை நெளியலாம்

Thursday, November 12, 2015

சவரக் கதை

சவரம்ன்னு சொன்னால் அந்தக் கால ப்ளாக் அண்ட் வொயிட் படத்துல அப்ளாக் குடுமி வைத்துக்கொண்டு வருகிற மாதிரி இருக்கிறது என்பதால் அங்கங்கே சுத்தத் தமிழில் ஷேவிங் என்றே சொல்லிக் கொள்ள அலொவ் மீ யுவர் ஆனர். வயது வந்த ஆண்களுக்கெலாம் அவர்களுக்கே அவர்களுக்கான பிரத்தியேகமான நேரத்தில் ஒன்று டெய்லி முகச் சவரம் செய்துகொள்ளும் நேரம். சோம்பேறித்தனாமாய் இருந்தாலும் அன்றைய நாளில் செய்ய வேண்டியதில் ஆரம்பித்து இன்னது தான் என்றில்லாமல் கிர்யேட்டிவிட்டியும் ப்ரொக்ட்டிவிட்டியும் கொப்பளிக்கும் நேரமது . இளம்பிராய பெண்கள் குளிக்கப் போனால் குளம் வெட்டுவது மாதிரி சின்ன வயதில் நானெல்லாம் ஷேவிங் செய்யப் போனால் "இவன் சவரம் செய்யப் போனானா, சம்பந்தம் பேசப் போனானா" என்று வீட்டில் மாமா கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்.

இதில் பெரிய விஷயம் என்னவென்றால் ஹாரிப் பாட்டர் படத்தில் வரும் "The wand chooses you" என்பது மாதிரி இந்த ஷேவிங் ரேசர் அமைவது எல்லாம் பெரிய விஷயம். டீ.வியில் பலூனுக்கு ஷேவிங் செய்வது மாதிரி நோகாமல் விசுக் விசுக் என்று ரெண்டு இழுப்பு இழுத்துவிட்டு துண்டால் துடைத்துவிட்டு பக்கத்திலிருக்கும் ஃபாரின் ஏந்திழையை ஏந்தி இழைக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்பிரசண்டி காலத்தில் நானெல்லாம் ஷேவிங் செய்துவிட்டு வந்தால் மிஷ்கின் படத்து சண்டைக்காட்சியில் நடித்து விட்டு வந்த மாதிரி முகம் ரணகளமாக இருக்கும். மாமி வேறு சமயசந்தர்ப்பம் தெரியாமல் கொல்லைப்பக்கம் விழுந்துட்டியான்னு அக்கறையாய் விசாரிப்பார். இந்த இம்சையே வேண்டாம் என்று நம்மவர் மாதிரி தாடி வைத்துக்கொள்ளலாம் என்றால் நம்ம தாடி கள்ளிக் காட்டு இதிகாசமாய் அங்கங்கே முளைத்திருக்கும்.  இப்படி போச்சுன்னா அப்புறம் நமக்கு எப்படி ஏந்திழைன்னு கவலையோ கவலை, அப்புறம் இது ஷேவிங் ரேசர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று அட்வைஸ் வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் (சைய்...ரிட்டையர் ஆன மாதிரி என்னயா  "அப்போதெல்லாம்") மெட்டல் ரேசர் ஒன்று தான் எங்க ஊரில் பிரபலம். அடியில் திருகினால் அலாவுதீனும் அற்புத விளக்கும் மொட்டை பூதம் மாதிரி "ஹூசூர் என்ன வேண்டும்"என்று மேலே திறக்கும். அதில் ஒரு ப்ளேடை வைத்து திரும்பத் திருக்கி ஒரு ஆங்கிளாக ஷேவ் செய்யவேண்டும். அத்தோடு அந்த மெட்டல் ரேசர் இட்லி வைக்கிற இண்டாலியம் சட்டி மாதிரி கனமாக வேறு இருக்கும். ஷேவிங் செய்தாலே ஆர்ம்ஸ் ஜிம் எஃபெக்ட்டில் டெவெலப் ஆகும். ஆங்கிளாய் என்று சொன்னேன் அல்லவா அது கரெக்ட்டாய் 45 டிகிரியில் இருக்கவேண்டும். 43 டிகிரியிலோ 47 டிகிரியிலோ வைத்தால் அதற்கு பிடிக்காது - மிஷ்கின் எஃபெக்ட் தான்.

அதற்கடுத்த மேட்டர் ஷேவிங் க்ரீம். ஒரு கருப்பு கவுன் போட்ட பெண்ணை இடுப்பை வளைத்து இழுத்துப் பிடித்து "பால்மாலிவ் கா ஜவாப் நஹி" என்று கபில்தேவ் சொல்வாரே அந்த பால்மாலிவ்லாம் எங்க மாமா ஒத்துக் கொள்ளமாட்டார் (ஹூம்.... கருப்பு கவுன் பெண்ணையும் தான்) . காத்ரேஜ்ஜில் ஒரு சின்ன வட்ட டப்பாவில் ஷேவிங் சோப் வரும், அந்தக் கால சினிமாவில் நாவிதர்கள் மரப்பெட்டியில்  அதைப் போன்ற ஒரு வஸ்துவைத் தான் வைத்திருப்பார்கள்,  அது தான் மாமா வாங்குவார். "காத்ரேஜ் என்ன கம்பெனி தெரியுமா, கடப்பாரையப் போட்டாலும் காத்ரேஜ் பீரோவ திறக்கமுடியாது, இந்த பீரோ என் கல்யாணத்துக்கு வாங்கினது இன்னிக்கு வரைக்கும் பெயிண்ட் கூட போகலை" என்று ப்ராண்ட் மார்கெட்டிங் ஆரம்பித்துவிடுவார்.  பால்மாலிவ்வும் காத்ரேஜ் கம்பெனியுதுதான்னு சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம் சித்தப்பா பெரியவரா பெரியப்பா பெரியவரா பெரியங்கிறது எதுல வருது? இதுல காத்ரேஜ்ன்னு பெரிசா போட்டிருக்கு அதுல எப்படி போட்டிருக்கு என்று மாமா ஏற்றுக்கொள்ளவில்லை. மேட்டர் அதுவல்ல பின்னாடி போட்டிருந்த விலையில் என்பது எனக்குத் தெரிந்தாலும் சூப்பர் சிங்கரில் சொல்வார்களே "எல்லாம் ஒகே அந்த டயனமிக்ஸ் வரலை" என்று -  ஒன்னியும் சொல்ல முடியாது.

அதற்கடுத்தது ஷேவிங் ப்ரஷ். இந்த முறை இருகோடுகள் தத்துவத்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்று முதலில் பார்க்  அவன்யூ ஷேவிங் பிரஷ்ஷில் ஆரம்பித்தேன். பால்மாலிவில் ப்ரஷ் அதை விட சல்லிசாக கிடைக்கும் மாமா விழுந்துவிடுவார் என்று நம்பிக்கை. இந்த முறை நான் காத்ரேஜ் என்ன கம்பெனி தெரியுமா, கடப்பாரையப் போட்டாலும் என்று ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே மாமா தேவர் மகன் சிவாஜி கணக்காய் "எலேய்...வாய மூடிக்கிட்டு பேயாம இருக்கணும் தெரியுமில்ல" என்று ஒரு உப்புமா கம்பெனி ப்ரஷை பரிசளித்துவிட்டார். அதன் தாத்பர்யம் தெரியாமல் வட்ட ஷேவிங் சோப் டப்பாவில் க்ரண்டரில் இட்லிக்கு உளுந்து அரைப்பது போல் ப்ரஷ்ஷை வைத்து க்ர்ர்ன்னு சுத்த, மூன்றாவது நாளுக்குப் பிறகு வடிவேலுக்கு ஷாக் அடிச்ச எஃபெக்ட்டில் பிரஷ் முடியெல்லாம் பப்ரப்பேன்னு  நிற்க ஆரம்பித்துவிட்டது.

அப்புறம் அங்க இங்க ஆட்டையைப் போட்டு கைக்காசையும் சேர்த்துப்  போட்டு நண்பணோடு போய் கட்டை விரலாலேயே ரேசரைத் திறந்து மூடும் ஒரே டிக் செவனோ க்ளாக் ப்ளாஸ்டிக் ரேசரும் பால்மாலிவ் க்ரீமும் வாங்கி கொஞ்ச நாட்களுக்கு மாமா பார்க்கும் போது ஒரு ஷேவிங் செட்டு பார்க்காத போது ஒரு ஷேவிங் செட்டு என்று இரு வீடு ஒரு வாசல் கதை ஓடிக் கொண்டிருந்தது.

நிற்க. இப்போ எதுக்கு இந்த டார்ட்டாய்ஸ் என்றால், போன வாரம் ஷேவிங் செய்யும் போது தான் எனக்கு உரைத்தது, அன்று காலேஜில் வாங்கிய அந்த ப்ளாஸ்டிக் செவனோக்ளாக் "சிங்கிள் டிக்" ரேசர் தான் இன்று வரை.  அவசர அவசரமாய் பாதி ஷேவிங்கில் தங்கமணியைக் கூப்பிட்டு "உனக்கு முன்னாடியே எங்க பந்தம் ஆரம்பித்துவிட்டது...இது அவ்ளோ ஸ்பெஷல்"  என்ற வரலாற்று செய்தியை இதை விட விளக்கமாய் சொன்னேன்.  பொறுமையாய் கேட்டு விட்டு கடைசியில் "நான்  கூட கடிகாரம் புதுசோன்னு பயந்துட்டேன்" என்று ப்ரெண்ட்ஸ் வடிவேலு ரியாக்‌ஷன் கொடுத்துவிட்டு  "இதுவுமா உங்ககிட்ட இத்தன  வருஷமா மாட்டிக்கிட்டிருக்கு" என்று கூலாய் போய்விட்டார். தடுக்கி விழுந்தா சாஃப்ட்வேர் இஞ்சினியர் இந்த சமுதாயத்துக்கு ஹிஸ்டரியில் ஆர்வமே இல்ல...அப்படியே விட்டுவிட முடியுமா...எங்கேயாவது ஆவணப் படுத்த வேண்டுமல்லவா...

Sunday, November 01, 2015

அயர்ச்சி


வாழ்க்கை வழக்கம் போல் அப்படியும் இப்படியுமாய் சுழன்று கொண்டிருக்கிறது.  ஆனால் இந்த ஆன்லைன் சமூக வட்டங்களில் அயர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பேஸ்புக் எப்போதாவது, ட்விட்டர் அதை விட மோசம், ப்ளாக் ஹூம் சொல்லத் தேவையே இல்லை என்றிருந்தாலும் வாட்ஸப்பில் தான் தொல்லை தாங்க முடியவில்லை. ஒன்னாப்பில் ஒன்றாய் ஒன்னுக்குப் போனோர் சங்கம், அஞ்சே முக்கால் ட்ரெயினில் மூனாவது காரேஜில் நின்று கொண்டே போனோர் சங்கம் என்று ஏதாவது ஒரு க்ரூப் ஆரம்பித்து சேர்த்துவிடுகிறார்கள். மொபைல் டேட்டாவை ஆன் செய்தால் பச்சாவ் பச்சாவ் என்று கதறுகிறது ஒரு நாளைக்கு நானூறு கருத்து மெசேஜ்கள், இருநூறு போட்டோ மீம்கள், நூறு காமெடி வீடியோக்கள், எட்டு கில்மா வீடியோ என்று குறைவில்லாமல் குமிகிறது.  டேட்டா வீணாய் போகவேண்டாமே என்று சமூகக் கடமையாய் எட்டை மட்டும் பார்த்துவிட்டு மற்றவற்றை அப்படியே டிலீட் செய்து கொண்டிருக்கிறேன். தாவு தீர்கிறது.

என்னவோ காலையில் ஆபிஸ் கிளம்புவதற்கு முன்னால் நிறைய நேரம் இருப்பது போல், மீசையில் ஒரு நரை முடி வந்திருக்கிறது. தேடித் தேடி கத்தரியால் கத்தரிப்பதற்குள் கால் மணி காலாவதியாகி விடுகிறது. வயசான பையனுக்குத் தான் எவ்வளவு சோதனைகள். இது போக மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது. அமைதியே இல்லாமல் இருந்தது. எதிலும் லயிக்கவில்லை. மனம் ஒருமுகப்படுவது என்பது நடவாத காரியமாய் இருந்தது. ஒரு மணி நேர வேலையை இரண்டு மணி நேரத்திலாவது முடிக்க வேண்டாமா ப்ச்.. ஒரு நாளாயிற்று சில நேரம் இரண்டு நாட்கள். ஆனால் இதற்கெல்லாம் எதிர் மாறாகத் தூக்கம் மட்டும் நன்றாக வந்து கொண்டிருந்தது. வெற்றிவேல் வீரவேல்ன்னு கொட்டக் கொட்ட முழித்து மிட் நைட் மசாலா பாத்ததெல்லாம் போய் எட்டு மணிக்கு டி.வியில் குத்துப் பாட்டு வந்தாலே தூக்கம் சொக்க ஆரம்பித்தது. துடிதுடிப்பாய் இருந்தது போய், தின்னா நடிகைக்கு கல்யாணம் கேன்சலானதே நாலு வாரம் கழித்துத் தான் தெரியவந்தது. அதற்கப்புறம் தான் அவருக்கு கல்யாணம் நிச்சயமானதே தெரியும். இப்படியே போச்சுன்னா கம்பெனியை ஸ்டாக் மார்க்கெட்டில் இருந்து தூக்கி விடுவார்கள் என்பதால் ஒரு பானபத்திர ஒனாண்டியிடம் ஆலோசனை கேட்டேன்.

ஓனாண்டி சாஃப்ட்வேர் பக்(Read Bug) பிக்ஸ் பண்ணுவதிலிருந்து பாவாடை நாடா முடிச்சுப் போடுவது வரை எல்லாத்துக்கும் சர்வ ரோக நிவாரணி. அன்றைக்கு செம ஃபார்மில் இருந்தார். கொஞ்சம் யோசித்து விட்டு "உடல் மனம் வாக்கு...இவற்றை வசப்படுத்து" என்று ஆரம்பித்து ஓனாண்டி ஒன்றரை மணி நேரம் ஓட்டிக் கொண்டிருந்தார். தம்பி இதே மஹாபாரதம் சீரியலை நானும் பார்ப்பேன்னு கிருஷ்ணா நம்ம ஃபிரண்டு தான்ன்னு ஒரு அதட்டு போட்டதும் தான் கொஞ்சம் அடங்கினார். இருந்தாலும் அவர் சொன்னாரே என்று யோகா செய்யலாம் என்று முடிவு செய்து தேட ஆரம்பித்தேன். மஜாஜ் பார்லர் மாதிரி அரை மணிக்கு இவ்வளவு ஒரு மணிநேரத்திற்கு அவ்வளவு என்று ஆளாளுக்கு கல்லா கட்டிக்கொண்டிருந்தார்கள். சில யோகா படங்கள் மாடிப்படியில் எக்கச்சக்கமாய் விழுந்து எசகுபிசகாய் உடம்பு முறுக்கிக் கொண்டது மாதிரி பார்க்கவே பயமாய் இருந்தது  நல்ல வேளையாக ஒரு பிரபல இந்திய யோகா சாமியார் லண்டனில் பல யோகா மையங்களை நடத்திக் கொண்டு யோகமாய் இருக்கிறார் என்றும் அவர் ப்ரீயாய் சில நாட்கள் நடத்துகிறார் என்றும் தெரியவந்தது. அதிலும்  "அடடே இதோ டாக்டரே வந்துட்டாரே" என்று பழைய தமிழ் படம் மாதிரி ஒரு யோகா மையம் என் ஆபிஸ் அருகிலேயே இருக்கவே, ஆன்லைனில் நோண்டிப் பார்த்து மத்தியானம் ஒன்றிலிருந்து இரண்டு வரை எனக்கு யோகா கற்றுக் கொள்வது தான் வாழ்க்கை இலட்சியம் என்று சேர்ந்துவிட்டேன்.

அந்த நன்னாளில் இடத்தைத் தேடிப் போனால் கள்ளக் கடத்தல் சரக்கைப் பதுக்கி வைக்கும் பிலிடிங்க் மாதிடி செங்குத்தாய் ஆறு அடுக்கில் இருந்தது. வாசலில் பஸ்ஸரை அமுக்குவதிலிருந்தே யோகா பயிற்சி ஆரம்பித்துவிட்டது. "ஹீ இஸ் நாட் இன் டுடே" என்று பதில் வர, ஸ்வாமி யோகா ஆள் இல்லை, ஒரு ஸ்பிரிச்சுவல் சயன்ஸ் என்று விளக்க, 'மூதேவி ஆறாவது மாடிக்கு ஏன்டா நாலாவது மாடி பஸ்ஸர அமுத்துற லிஃப்ட் வேலை செய்யலை மாடிப் படி ஏறியே சாவு ' என்று பதிலுக்கு அன்பாய் வழி சொல்லி ஆறாவது மாடிக்கு வந்தால் பத்துக்குப் பதினாலு ரூமில் போடப்பட்டிருந்த இருபது சேரில் ஒரே ஒரு பெண் மட்டும் ஓரமாய் பவ்யமாய் உட்கார்ந்திருந்தார். எங்கேயோ மறைவாக ஊதுபத்தி ஏத்தியிருந்தார்கள். "போன வாரம் பார்த்தப்போ கூட நல்லா சிரிச்சு பேசிட்டிருந்தாரே என்னாச்சி" என்ற சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி அந்தப் பெண் முகத்தில் சலனமே இல்லாமல் இருந்தார். நடு மையமாய் சுவாமிஜியின் புன்சிரிப்போடு ஆசிர்வதிக்கும் படம், சுவற்றில் ஒரு போஸ்டர் மற்றும் வால் கிளாக், ஓரமாய் ஒரு டேபிளில் சி.டி ப்ளேயர் என்று ரூம் பந்தா இல்லாமல் ரொம்ப அடக்கமாய் இருந்தது. வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வருவார்கள் என்று புரிந்தது.

ஆரம்பிக்கும் நேரம் நெருங்க நெருங்க எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் வருகிற மாதிரி தெரியவில்லை. கரெக்ட்டாய் ஒரு மணிக்கு அந்தப் பெண் எழுந்து வாட்சைப் பார்த்துக் கொண்டே ஆரம்பிக்கலாமா என்று கதவைச் சாத்தினார். சாப்பிட்டு வந்திருக்கிறீர்களா என்று முதல் கேள்வி. ஆமாம் நேரத்துக்கு சாப்பிடாம லேட்டாச்சுன்னா காஸ் ஃபார்ம் ஆகிடும்ன்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார் என்று சமாதானம் சொல்லி, இதற்கு முன்னால் நான் யோகா செய்தது இல்லை அதனால் எந்த விவரமும் தெரியாது என்று முதலிலேயே உண்மையை விளம்பினேன்.
கவலை வேண்டாம் இது மன அமைதிக்கான தியானம் மட்டுமே இங்கே உடல் சம்பந்தப்பட்ட யோகா பயிற்சி கிடையாது அது எங்கள் மெயின் செண்டரில் மட்டுமே (பர்சில் ஐநூறு ப்வுண்டும் உடலில் இரண்டு பவுண்டும் குறையும்). இங்கே கூட்டுப் பிரார்த்தனை மாதிரி வாரம் ஒரு நாள் மனதை ஒருமுகப் படுத்தும் தியானம் மட்டுமே. இது போல் லண்டன் சிட்டியில் பல இடங்களில் வெவ்வேறு நாட்களில் நடக்கும் என்று விளக்கமளித்தார். கையை தவம் செய்வது போல் வைத்துக் கொள்ளச் சொல்லி சுவற்றில் பல வண்ணங்கள் குவிகிற மாதிரி இருந்த ஒரு போஸ்டரை சில நிமிடங்கள் கூர்மையாக பார்த்து விட்டு கண்ணை மூடி தியானம் செய்யச் சொன்னார். சி.டி.யில் தம்புரா லூப்பில் ஓட ஆரம்பித்தது. கண்ணை மூடிக் கொண்டேன். சாப்பாடு போடுவாங்கன்னு ஆன்லைன்ல போடலையே ...என்னத்த வெப்சைட் மெயின்டெயிண் பண்ணுறாங்க போன்ற லௌகீகக் கவலைகளுக்கு அப்புறம் கொஞ்சம் ஒருமுகப் படுவது மாதிரி இருந்தது. இரண்டே பேர் தான் என்பதில் கொஞ்சம் கூச்சம் கலந்த சங்கடம் இருந்தது. மெதுவாய் ஓட்டைக் கண் விட்டு பார்த்தேன் அந்தப் பெண் எதிரே இல்லாமல் என் வரிசையிலேயே அவரும் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தார் என்று புரிந்தது. சைட் ஓட்டைக் கண் ஈஸியாய் கண்டுபிடித்துவிடுவார் என்பதால் அதற்கு மேல் முயற்சி செய்யவில்லை. ஒரு முகமாய் நிலைக்க கஷ்டப்பட்டது. அவர் பாப் கட் பண்ணியிருந்தாரா என்று டவுட்டு வந்தது.  அவருக்கு சம்பளம் உண்டா இல்லை பாவம் ஓசி காஜா என்று அவருக்காக மனம் விசனப்பட்டது. அப்படியே மெதுவாய் மத்தியானம் சாப்பிட்ட பொங்கல் மிளகு வாசத்தோடு ஓங்கரிக்க கொஞ்ச நேரத்தில் தியானம் வசப்பட்டது. யாரோ கண்ணைத் திறக்கலாம் என்று சொல்வது மாதிரி இருந்தது. இரண்டாம் முறை சொன்ன போது அவர் தான் என்று புரிந்தது.  தியானம் சல்ல்லுன்னு போய்ட்டு இருக்கும் போது வண்டிய சடக்குன்னு பிரேக் போட முடியாது பாருங்கோன்னு முகத்தை வைத்துக் கொண்டு மெதுவாய் கண்ணத் திறந்தால் அவர் சிடி ப்ளேயரை ஏறக் கட்டிக் கொண்டிருந்தார்.  கதவு திறந்திருந்தது.

அடுத்து எப்போ க்ளாஸ் என்று கேட்டேன். ஆன்லைன்ல அப்டேப் பண்ணுவோம் என்று முடித்துக் கொண்டார். உங்களுக்கு இந்த பயிற்சி பயன் பட்டிருக்கும் என்று நம்புகிறேன் ஏதாவது சந்தேகங்கள் இருக்கிறதா என்று வினவினார். இல்லை என்று நானும் முடித்துக் கொண்டேன். பதிவை எங்கே ஆரம்பிப்பது என்று மனதில் தெளிவு பிறந்திருந்தது.