Thursday, October 10, 2013

கற்றதும் பெற்றதும் - Dubukku 10.0

இந்தப் பதிவு இந்த வலைத்தளத்தின் பத்தாவது அனிவெர்சரி அன்று பதிவதாய் இருந்தது. ஹீ ஹீ வழக்கம் போல....

2001ம் ஆண்டு  - இங்கிலாந்து வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று எழுத்துரு எல்லாம் நிறுவி இடுப்பழகி சிம்ரன் ஆப்பிள் சூஸ் குடிக்கும் போது செகெண்ட் ஹீரோயினை என்ன சொல்லி திட்டினார் என்று இணையத்தில் கிசு கிசு படித்த காலம். அப்போது தமிழ் யுனிகோட் வரவில்லை (வந்திருந்தாலும் என்னைப் போன்ற பாமரர்களிடையே பிரபலமடையாத ஒரு காலம்). எங்கிருந்தோ ஒரு தமிழ் நிரலி கிடைக்க, நாய் கையில் (அதாவது காலில்) கிடைத்த தேங்காய் மாதிரி உருட்டிக் கொண்டிருந்தேன். அப்படியே பிரவாகமாய் வருவதையெல்லாம் எழுதி யாருக்காவது எப்படியாவது காட்டவேண்டும் என்று ஒரு உத்வேகம்.  "எனது பக்கத்து வீட்டுக்காரர் பல்லே தேய்க்காமல் டெய்லி வந்து குட்மார்னிங் சொல்கிறார் அவரை திருத்த நீங்கள் தான் ஒரு வழி காட்டவேண்டும்" என்று அன்புள்ள அல்லிக்கு எழுதி போடுவது வரை யோசித்திருக்கிறேன்.

2003ல் நெருங்கிய நண்பன் சக்ரா ஆங்கிலத்தில் ப்ளாக் என்ற உலகத்தை அறிமுகப் படுத்தினான். அவனுடைய பதிவுகள் எல்லாம் படித்துக் கொண்டிருந்த போது தான் நாம் ஏன் அன்புள்ள அல்லியை இங்கே அரங்கேற்றம் செய்யக் கூடாது என்று பல்பு எரிந்தது. அப்போதெல்லாம் என்ன பதிவுகள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள திரட்டிகள் கிடையாது. முகவரி தெரிந்தால் மட்டுமே ஒருவர் பதிவிற்குப் போக முடியும். அதனால் ஆபிஸில் முக்கிய வேலையே தெரிந்தவர் பதிவுகளுக்குப் போய் அங்கே கமெண்டியிருக்கும் மற்றவர்களின் (முக்கியமாய் பெண் பதிவர்) பதிவுக்குப் போய் "Excellent post, very nice, keep it up" என்று கமெண்ட் போட்டுவிட்டு வருவது தான். மூன்று நான்கு தரம் இவ்வாறு செய்தால் (பெண்களுக்குப் பத்து தரம்) அவர்களும் நம் பதிவில் வந்து "உங்க ப்ளாக் தீமே நன்றாக இல்லை கண்ணை உறுத்துகிறது please change it" என்று விளக்கேற்றி வைத்து விட்டுப் போவார்கள். அப்போது பதிவு பெயர்களெல்லாம் ஆங்கிலத்தில் மிரட்டு மிரட்டு என்று மிரட்டுவார்கள். ப்ளாக் பெயரைப் பார்த்தாலே பத்து ஆஸ்கர் வாங்கிய படம் மாதிரி கேராக இருக்கும், அத்தோடு ஆங்கிலப் படங்கள் மாதிரி "The whole world is a bathroom" என்று ஒரு ஒன் லைன் டேக் வேறு உண்டு. ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் இப்படித் தான் கற்றுக் கொண்டேன். எனக்கு தமிழில் தான் எழுத வரும் என்று நன்றாகத் தெரியுமாகையால் தமிழ்ப் பெயராகவே வைக்கலாம் என்று எண்ணம். சங்கத் தமிழில் லொடுக்குப் பாண்டி என்று வைக்கலாமா இல்லை டுபுக்குன்னு வைக்கலாமா என்று இங்கி பிங்கி போட்டு டுபுக்கு என்ற பெயரே அழகாக இருக்கிறது என்று ஆரம்பித்துவிட்டேன்.  வைகறையில் வைதேகி, புல்வெளியும் பனித்துளியும் என்று கவித்துவமான பெயர்களுக்கிடையே "What is this name Dubukku ya very funny " என்று பெண்கள் கேட்கவும் "Planning makes Perfect" அப்பாடா பட்ட கஷடம் வீண்போகவில்லை என்று எனக்கு திருப்தியாகிவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது யாராவது வந்து "யோவ் அது ஒரு கெட்ட வார்த்தைய்யா உடனே மாத்து" என்று அன்பாய் எச்சரிப்பார்கள். போங்கண்ணே நான் லத்தீன் மொழியில் உள்ள சாமி பெயர் டுபுக்குல்லா வச்சிருக்கேன் என்று சொல்லிவிடுவேன்.

தமிழ் யுனிகோடு இல்லாததால் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் பதிவேற்ற ஆரம்பித்தேன். கொஞ்ச நாளிலேயே "There is no use of playing violin at the back of the buffalo"ன்னு புரிந்தது. நல்லவேளை 2004ல் யுனிகோடு தமிழ் எனக்கு அறிமுகமாகியது. ஆனால் அப்போது தமிழ் யுனிகோடு விண்டோஸ் இண்ஸ்டலேஷனில் கட்டாயமாக்கப் படவில்லையாதலால் அந்த யுனிகோடு எழுத்துருவை நிறுவினால் தான் பதிவு தெரியும் இல்லையென்றால் செங்கல்பட்டு நம்ம சிட்டி லேஅவுட் மாதிரி கட்டம் கட்டமாய்த் தான் தெரியும். முதலில் இரண்டு ஆம்பிளைப் பசங்க வந்து கட்டம் கட்டமாய் தெரியுது என்றார்கள். வீட்ல யாரும் இல்ல ரெண்டு வீடு போய்ட்டு வாங்கப்பான்னு அனுப்பிவிட்டேன். அப்புறம் இரண்டு பெண்கள் வந்து "ஹே நத்திங் விசிபிள் யா ஒன்லி பாக்சஸ்" என்றார்கள். ஆஹா கோவில்ல கச்சேரி சாமிக்கா வாசிக்கிறோம், இது பெரிய பிரச்சனையாச்சே என்று ரூம் போட்டு யோசித்து பதிவை பிக்கசர் வடிவிலும் ஏற்றி வர ஆரம்பித்தேன். பெண்களும் LOLன்னு ஆதரவளிக்க ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் தமிழ்ப் பதிவர் கூட்டம் ரொம்பக் குறைய என்பதால் எங்கே போனாலும் சொந்தக்காரங்க கல்யாணத்திற்கு போன மாதிரி திரும்பத் திரும்ப தெரிந்தவர்களையே பெரும்பாலும் பார்க்க நேரிடும்.

ப்ளாகரில் ஆரம்பத்தில் கமெண்ட் வசதி கிடையாது. ரொம்ப நாள் கழித்து கூகிள் வாங்கிய பிறகு தான் அதெல்லாம் வந்தது. ஆரம்பகாலத்தில் backblog  போன்ற வேறு plugins தான் பின்னூட்டத்திற்கு உபயோகப் படுத்த வேண்டும். அவர்களும் "தம்பி கல்லால காசு போட்டா நீ கடலை போட்ட அத்தனை கமெண்டயும் வைச்சிக்கிறோம் இல்லாட்டி மொத்தம் ஐம்பது கமெண்ட் தான் மிச்சமெல்லாம் காணாமப்பூடும்" என்று பிச்சையெடுக்க,  "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் கேக்கிறியேடா, எங்ககிட்டயேவா"ன்னு கையை விரிக்க அப்புறமென்ன அந்த கம்பெனிகள் காலப்போக்கில் திவாலாகி ஆரம்பகால கமெண்டுகள் எல்லாம் அவர்களோடு அப்படியே காணாமல் போய்விட்டது - இது ஒரு பெரிய சோகம். இன்றளவும் திடீரென்று பழைய பதிவை நோண்டி ஏன் இந்த பதிவுக்கெல்லாம் ஒருத்தருமே கமெண்ட் போடவில்லை என்று கேட்பவர்களுக்காக இந்த விளக்கம்.

- தொடரும்

Tuesday, October 01, 2013

அம்மாவாசை

நிறைய நாட்கள் இங்கே எழுதவில்லை. இருந்த போதும் இங்கே வந்து பார்த்து நினைவூட்டி,  மிரட்டிய உங்களின் அன்பிற்கு கோடானு கோடி நன்றி, இதயப் பூர்வமாய் மன்னிப்பும் கோருகிறேன். வராததற்கு காரணங்கள் நிறைய (சொல்லமுடிபவை கொஞ்சம் :) ) இந்த மாதிரியான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பிப்பது நின்று போன புல்டோசரை தள்ளி ஸ்டார்ட் செய்வது மாதிரி. தள்ள ஆரம்பித்திருக்கிறேன் பார்ப்போம் :)

போன மாதம் இந்தியா பயணம் இனிதே முடிந்து திரும்பினோம். சில முக்கியமான காரணங்களுக்காக இந்தியா பயணம் என்பதால் சென்னையில் நண்பர்களை சந்திக்க முடியாமல் போனது பெரிய வருத்தம். சென்னையில் இறங்கிய கையோடு அப்துல்லா அண்ணாச்சியை ஃபோனில் பிடித்த போது நாமக்கல்லில் பிசியாய் இருந்த்தார். சரி ஊருக்குப் போய்விட்டு திரும்ப வரும் போது எல்லாரையும் சந்திக்கலாம் என்று நினைத்தால் திரும்ப வந்த நான்கு நாட்களில் அங்கே இங்கே என்று அலைந்தே போய்விட்டது. இதில் ஜல்பு மற்றும் உடல் நலக் குறைவு வேறு. அப்துல்லா அண்ணாச்சி,அனன்யா, நர்மதா, தீக்‌ஷண்யா, சங்கரலிங்கம் அண்ணாச்சி மற்றும் நான் சந்திக்க நினைத்திருந்த/வாக்குறுதியளித்திருந்த ஏனையோரும் கோவிக்காதீர்கள் ப்ளீஸ் மன்னித்தருளவும்.

ஜெட் ஏர்வேஸ் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல் ஸ்கர்டில் 2004 வரை வலம் வந்த பைங்கிளிகளெல்லாம் தற்போது ஆவாரா ஹூன் ராஜ் கபூர் மாதிரி தொள தொளாவென்று கால்சராய் அணிந்து சும்மா கிழக்கும் மேற்கும் நடந்து கொண்டு டீ வேணுமா, சூஸ் வேணுமா என்று கேட்கிறார்கள். "ஹூ இஸ் தேட் டிஸ்டர்பர்ன்ஸ்" என்று தூக்கம் தான் வருகிறது. வாஸ்துபடி என்னை 25டி சீட்டிற்குப் பக்கத்தில் உட்காரச் சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டுப் பார்த்தேன். டாஸ்மார்க்கில் வேலைப் பார்ப்பது மாதிரி சாரி சார், புல் என்று சொல்லிவிட்டார்கள். அப்புறம் ஒரு போர்வையாவது குடுங்கம்மா என்று கேட்டு வாங்கிக் கொண்டு தூங்கியேவிட்டேன்.

நண்பர்களை சந்திக்க முடியாமல் போன தலையாய வருத்தத்திற்கு பிறகு அடுத்து வருவது  இப்போ வாங்கலாம் அப்போ வாங்கலாம் என்று எனது லிஸ்டில் ஒரு புத்தகம் கூட வாங்காமல் மகள்கள் 28 - 0 என்ற ஸ்கோரில் என்னைப் பார்த்து ஏளனமாய் சிரித்துக் கொண்டிருப்பது. மகள் வாங்கிய "The Alchemist"- ஐ கடன் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

மும்பையில் இண்டர்நேஷனல் டெர்மினலலிருந்து டொமஸ்டிக் டெர்மினலுக்கு அழைத்து செல்லும் பேருந்தில் கூட்டம் அதிகமாகி இரண்டு குழந்தைகள் உட்கார்ந்திருந்த சீட்டில் போலீஸ்காரர் இன்னொரு குழந்தையை உட்காரவைக்க, அது என்.ஆர்.ஐ ஆக்சண்டுடன் இப்படி உட்கார்ந்தா போலிஸ் பிடிக்கமாட்டார்களா என்று அம்மாவைக் கேட்க, அந்த போலிஸ்காரரே இவர்தான்மா என்று அம்மா சொல்லாமல் காட்டிய ரியாக்‌ஷனை இந்த மாதிரி ஒரு பத்திக்கு இழுக்காமல் ராஜேந்திரக்குமார் “ஞே” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்திருப்பார்.

கோலம் போடுவது, பால் பாக்கெட் வாங்குவது, போன்றவற்றிற்கு மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலி, மற்ற நேரங்களுக்கு ஒரு தாலி என்று சென்னை மகளிர் தாலிக்கு ஷிப்ட் சிஸ்டம் அமுல் படுத்தியிருக்கிறார்கள்.

சரவண பவன் வைத்திருக்கும் ஐந்து ரூபாய் விலைகுறைப்பு போர்டு தவிர விலைவாசி எங்கும் குறைந்ததாகக் காணக் கிடைக்கவில்லை. முதல் நாள் குடுத்த ஸ்பெஷல் டீ நன்றாக இருக்கிறதே என்று அடுத்த நாள் குடித்தால் வாயில் வைக்க விளங்கவில்லை.

இந்த முறையும் சென்னையில் வாய்த்த ஆட்டோகாரர்கள் எல்லோருமே நல்லவர்களாக இருந்தார்கள். அதுவும் ஒரு ஆட்டோக்காரர் இரவு 10:45 மணிக்கு நான் தங்கமணியுடன் பேசிய உரையாடலை கவனித்து, வாங்க மறந்த மொபைல் சார்ஜருக்காக அவரே ஒரு கடை கண்டுபிடித்து வெயிட்டிங் செய்து ஒற்றை பைசா கூட அதிகம் வாங்க மறுத்த பண்பு மறக்க முடியாதது.

குத்தால துண்டை துப்பட்டா மாதிரி போர்த்திக் கொண்டு அதிகாலையிலும் சந்தி வேளையிலும் உலாத்தும் நைட்டி தேவதைகள் ஊர்ப் பக்கத்தில் இன்னும் மாறவே இல்லை.

மயிலை டேங்க் சரவணபவனில் டி.வி. செலிபிரிடீஸை நிறையக் காணக் கிடைக்கிறது. ஏனோ இந்த முறை இந்தியா ட்ரிப்பில் டேங்க் சரவணபவன் தவிர வேறு எந்த ஹோட்டலிலுமே சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


இந்த முறை திகட்டத் திகட்ட சென்னை பல்லவனில் பயணம் செய்தேன். சென்னையில் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த வேலை நாட்கள் நியாபகம் வந்தது.


வீட்டில் இருக்கும் விஜய் பேஃன் நச்சரித்து தலைவாவை எக்ஸ்ப்ரெஸ் மால் சத்யமில் முதல் நாளே காணும் பாக்கியம் கிடைத்தது. விஜய் ஓப்பனிங் சீனிற்கு விசில் அடிப்பதற்கு பேரம் பேசி நூறு ரூபாய் மகளிடமிருந்து தேறியது. காண்ட்ராக்ட்டில் இல்லாத அமலா பால் ஓப்பனிங் சீனிற்கு காதைப் பிளக்கும் வண்ணம் நான் மட்டுமே விசில் அடித்தது மிகுந்த வருத்தமளித்தது. என்ன மாதிரி ஒரு சமூ....

இனிய தோழி சுபா பிரபாகருக்காக சேம்பர் ஆஃப் காமெர்ஸில் மதுரையில் கல்லூரி மாணவர்களுக்கு பேச ஆரம்பித்த மைக் மோகன் யோகம் அடுத்தடுத்து மூன்று வாய்ப்புகளாகி என்னடா இன்னுமா உன்ன இந்த ஊரு நம்புது என்ற உயரத்திற்குப் போய் நாலாவது வாய்ப்பாக மாறி அடுத்த முறை செய்கிறேன் ப்ளீஸ் என்று வாய்தாவாங்க வேண்டிய லெவலுக்குப் போய்விட்டது.

சுபா குடும்பத்தாரின் விருந்தோம்பல் மறக்கமுடியாதது. அவ்வளவு இனிமையான குடும்பம். ஃபோட்டோவ விட நேர்ல நீங்க ஹீரோ மாதிரி அழகா இருக்கீங்க சார் என்று பிரபாகர் மூன்று முறை தங்கமணி முன்னால் புகழ்ந்தது இந்த ட்ரிப்பின் ஹைலைட். அடடா மதுரையின் மாணிக்கம்ங்க அவர்.
முதன் முறையாய் ஆத்தெண்டிக் ஜிகர்தண்டா சுவைக்கும் பாக்கியம் இவர்களால் கிட்டியது.

ஊரில் குத்தால சீசன் ரம்மியமான தூறலும் காற்றுமாய் களை கட்டியது. ஸ்கூல் நண்பர்களின் மீட் குற்றாலத்தில் நடைபெற்றது. அப்படியே மகள்களுக்கு அருவியைக் காட்டி வரலாம் என்று பார்க்கப் போனால் அருவியைப் பார்பதற்கே இரண்டு நாட்கள் ஆகும் போல் அவ்வளவு கூட்டம்.

சென்னையில் கால் டேக்ஸி தரம் குறைந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ட்ரைவர்களெல்லாம் ஆட்டோ ட்ரைவர் மாதிரி ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் புக் செய்யும் போது எங்க போறீங்க, யாரப் பார்க்க போறீங்க, என்ன வாங்கிட்டு போறீங்க என்று நோண்டு நோண்டுன்னு நோண்டி விட்டு போக வேண்டிய நேரத்தில் அதிகாலை நாலு மணிக்கு ட்ரைவர் கால் செய்து எங்கய்யா போனும் உனக்கு..? முதல்ல நீ எங்க இருக்க எங்கேர்ந்து போகனும் என்று எரிச்சல் படுகிறார். வருகிற ட்ரைவருக்கு புக் செய்த கஸ்டமர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற அடிப்படைத் தகவல் கூட போகாவிட்டால் அப்புறம் என்ன இதுக்கு புக் பண்ணும் போது வீட்டுப் பக்கத்து லேண்ட் மார்க் முதற்கொண்டு அவ்வளவு கேள்விகள் கேக்கறீங்க...?

மதுரைக்கு இந்தப் பக்கம் மதுரைக்கு அந்தப் பக்கம் என்று எஃப்.எம் ரேடியோவில் போடும் பாட்டுக்களின் ரகமே தனியாக இருக்கிறது. அதுவும் நெல்லை சூரியன் எஃப்.எம்.ல் கிராமிய மணம் மணக்க மணக்க மொட்டை ஆட்சி தான். இரவில் பொதிகை காற்றில் ராசாவின் பாட்டுக்களைக் கேட்டுக் கொண்டே காரில் பயணித்தது அடா அடா அடா

மயிலாப்பூரில் நிறைய தெருக்களில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இருந்த குழி அப்படியே இருக்கிறது. இந்த வருடம் இருந்த ஒரே வித்தியாசம் அதில் யாரோ ஒரு கம்பு நட்டு சாயம் போன உள்பாவாடையை மற்றவர்களில் எச்சரிக்கைக்காக தொங்க விட்டிருக்கிறார்கள்.
மயிலை ஆழ்வார்பேட்டை ட்ராபிக் முழிபிதுங்குகிறது. வள்ளுவர் சிலையிலிருந்து இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னல் வரை மாலை ட்ராஃபிக்கில் கால் டாக்ஸியில் நகரமுடியாமல் அடி அடியாய் எடுத்து வைத்து கடைசியில் சென்றடைந்த இடத்தில் நூற்றைம்பது ரூபாய் எக்ஸ்ட்ரா தண்டம் அழுதேன்.


இருந்த இருபத்தைந்து நாட்களுக்குள் ஏதாவது மசோதா போட்டு மாத்தியிருக்கமாட்டார்களா என்ற நப்பாசையில் ப்ளைட் ஏறினால் வரும் போதும் ஜெட் ஏர்வேஸில் ஆவாரா ஹூன் தொள தொளா பேண்ட் தான். ஒரு சூஸு குடுமா என்று கேட்டு வாங்கிக் குடித்து விட்டு திரும்பவும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிவிட்டேன். இல்ல இல்ல இல்ல சொக்கா எனக்கில்லை

*********************************

அக்டோபர் மூன்றாம் திகதியுடன் டுபுக்குவிற்கு பத்து வயது பூர்த்தியாகிறது :)) உங்கள் அன்பையும் ஆதரவுவையும் என்றும் நாடும் - உங்கள் டுபுக்கு