Monday, November 24, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.5

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4

பார்த்தசாரதி ஜெனரலாக பாச்சா என்று ஆகிவிடுவதால் எனக்கு தெரிந்த கிருஷ்ணமூர்த்தி கிச்சாவாகிப் போனான். கோலிவுட் படங்களில் எப்பவோ விளம்பரம் மற்றும் பீ.ஆர்.- க்ளாமர் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரைப் பார்த்ததிலிருந்து இவனும் க்ளாமர் கிச்சாவாகிப் போனான். இவன் உருவத்திற்கும் க்ளாமருக்கும் ஒன்றரை கிலோமீட்டர் தூரம். வேட்டியோ பாண்ட்டோ எதுபோட்டாலும் நெற்றியில் சந்தனத் தீற்றல் இருக்கும். குணத்தில் தங்கம். வள்ளலாரின் வளர்ப்புப் பையன் மாதிரி தான் பேசுவான். எல்லாருக்கும் அந்தப் பக்கம் அசினும் இந்தப் பக்கம் இலியானாவும் காத்துக்கொண்டிருக்கும் போது இவன் அலட்டிக்காமல் "நம்ம பெர்சனாலிட்டிக்கெல்லாம் ஏதாவது தேறுமா...?" என்று மனிதருள் மாணிக்கமாய் இருப்பான். திருவள்ளுவர் "அடக்கம் அமரருள்..." குறளே இவனை பார்த்தபிறகு தான் எழுதியிருப்பாரோன்னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.

அழகான பெண்கள் கடந்து போனால் அமைதியாய் பார்ப்பான். ஆர்ப்பாட்டமே இருக்காது டேய் எப்படிடா இப்படி...ன்னு அடிக்கடி புல்லரிக்கவைப்பான். "டேய் கிச்சா உனக்கு இந்த வயசுக்கேத்த கிளுகிளுப்பே இல்லையேடா"ன்னு கேட்டால் "அதான் பேர்லயே சேர்த்திருக்கீங்களே...க்ளாமரை"ன்னு மாணிக்கும் அருளும். கிச்சாவோட ரொம்ப நேரம் இருந்தால் எனக்கு மட்டும் தான் உடம்பில் ஹார்மோன்கள் அதிகமாய் ஆட்டம் போடுகிறதோ என்று சந்தேகம் வந்துவிடும். இருந்தாலும் கூட இருக்கும் வானரங்கள் சும்மா விடாது. "என்ன கிச்சா..மூனு தலைமுறை..சேலம் டாக்டர் அடுத்த மாசம் சரஸ்வதி லாட்ஜ்ல ரூம் போட்டிருக்காராம்...அப்பாயிமென்ட் போட்டுருவோமா..."ன்னு வம்புகிழுத்தாலும்..அசரமாட்டான்.

"டேய் மனுஷனா இருந்தா ஃபீலிங்க்ஸ வெளில கொட்டனும்...இவன் இப்படி ஊமைக்கொட்டானா இருக்கறதுக்கு...பார்த்துக்கிட்டே இருங்கடா..ஒருநாள் எவளையாவது இழுத்துகிட்டு ஓடப்போறான்...அன்னிக்குத் தெரியும்...க்ளாமர் கிச்சானு கரெக்ட்டா தான் பேரு வைச்சிருக்கோம்ன்னு" - கன்னுக்குட்டி கணேசன் அவன் பாட்டி சொல்லுகிற பழமொழியெல்லாம் மேற்கோள் காட்டி அடிக்கடி சூளுரைப்பான். க்ளாமர் கிச்சா அதற்க்கும் வழக்கமான சிரிப்பை தான் உதிர்ப்பான்.

பக்கத்து ஊரில், எனக்கு நாலு தெருவுக்கு ஒரு தாய்மாமாவை குடிவைக்கிற ரேஞ்ஜுக்கு எங்க தாத்தா லெவல் காட்டியிருந்ததால், அடிக்கடி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அந்த ஊருக்கு போய் வருகிற சந்தர்ப்பம் வரும். இப்படி போய் வரும் போது ஒரு நாள் க்ளாமர் கிச்சா அங்கிருந்த ஆஸ்பத்ரியில் இருந்து வெளியே வந்து பஸ்ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தான். அன்றைக்கு அது பெரிதாகப் படவில்லையாதலாலும், எனக்கு அவசரமாய் அடுத்த தெருவில் வேலையிருந்ததாலும் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் தெரு கிரிக்கெட் முடிந்து ஆல் இந்தியா மீட்டிங்கில் கன்னுக்குட்டி கணேசன் கிளாமர் கிச்சா அடிக்கடி கல்லிடைக்கு போய் வருகிறான் என்று போட்டு உடைத்துவிட்டான். "கிச்சா உண்மையச் சொல்லு வழக்கமா அஜீஸ் ஆஸ்பத்ரிக்கு தானே போவ..இப்ப என்ன ஆஸ்பத்ரிக்கு ஊருவிட்டு ஊரு போற.? எங்களுக்கு தெரியாம ஏதாவது தப்பு காரியம் பண்ணி உனக்கு வயத்துல ஏதாவது உண்டாகிடுத்தாடா"ன்னு பயல்கள் க்ளாமர் கிச்சாவை கலாய்த்ததில் கிச்சா அன்றைக்கு ஏகத்துக்கு அப்செட் ஆகிவிட்டான்.

இரண்டு நாள் கழித்து தெருவில் வயதுப் பெண்கள் நடமாடும் சாயங்கால நேரத்தில் எனக்கு எதாச்சயாக கல்லிடையில் மீண்டும் ஒரு முக்கியமான வேலை இருந்ததது. வேலையை முடித்துக்கொண்டு திரும்புகிற சமயத்தில் மீண்டும் கிச்சாவைப் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். முகம் ஆட்டோகிராப் சேரன் ரேஞ்சுக்கு ஒரே ஃபீலிங்க்ஸாய் இருந்தது.

இங்கிலாந்தில் எப்பவோ ஒரு காலத்தில் ஃபிலிப்ஸ் கம்பெனிகாரன் சைக்கிள் உற்பத்தி செய்ய ஆரம்பித்த போது ஒரு சைக்கிளை எங்க மாமாவிற்கு பெரிய மனசு பண்ணி விற்றிருந்தான். அதை எங்க மாமா "என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்"ன்னு என்னிடம் ஒப்படைத்திருந்தார். பொழைக்கத் தெரியாத இங்கிலாந்து ஃபிலிப்ஸ்காரன், ஊர்ல இருக்கிற இரும்பையெல்லாம் உருக்கி சைக்கிளை கனமாக செய்திருந்தான். உட்கார்ந்து அழுத்துவதற்கு ஒன்பது இட்லி சாப்பிடவேண்டும்...இந்த தொழில் ரகசியத்தை வெளியில் விடாமல் "ஊர்ல எவன்கிட்டயாவது இங்கிலாந்து ஃபிலிப்ஸ் சைக்கிள் இருக்காடா"ன்னு உதார்விட்டுக் கொண்டு ப்ரீமியம் டிக்கட்டுகளை மட்டும் தான் பின் கேரியரில் ஏத்துவேன். "டேய் ஒரு காலத்துல தான் சைக்கிள் மெனுபாக்ச்சர் பண்ணினது ஃபிலிப்ஸ் காரனுக்கே மறந்து போயிருக்கும்...மியூசியத்துல வைக்கவேண்டியதை எல்லாம் ஓட்டிட்டு திரியற...பார்த்துடா ஒரு நாள் உன்னை உள்ள வைச்சிறப் போறாங்க"ன்னு நான் ஏத்தாத ஹெவி வெயிட் பார்ட்டிகள் வயிற்றெரிச்சலைக் கொட்டும்.

அன்றைக்கு சற்று இருட்டிவிட்டத்தாலும் பாலத்தை தாண்டிய ஏற்றத்தில் சைக்கிளை பின்னாடியிலிருந்து தள்ள ஒரு ஆள் தேவைப்பட்டதாலும் சேரன் ஃபீலிங்க்ஸ் க்ளாமர் கிச்சாவை சைக்கிளில் லிப்ட் குடுக்க பெரிய மனது பண்ணினேன். அன்றைக்கு ஏனோ கிச்சா வழக்கமாய் பேசும் வள்ளலார் பற்றி கூட பேசவில்லை. வழி நெடுக அமைதியாக வந்தான். "என்னடா க்ளாமர்... ஏதவது ப்ராபளமா..என்ன ஆஸ்பதிரிக்கு..? யாருக்காவது உடம்பு சரியில்லையா"ன்னு ஊருக்கு வந்ததும் கேட்டேன். கையைப் பிடித்துக் கொண்டு "டேய் சாப்பிட்டுட்டு வாயேன்..கொஞ்சம் காலாற பாலம் வரைக்கும் நடக்கலாம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"ன்னு சொன்ன போது ஏதோ சீரியஸ்ன்னு தெரிந்தது.

அன்றைக்கு வாக்கிங் போன போது "டேய் யாருகிட்டயும் மூச்சு விட்டுறாதடா..."ன்னு நூறு தரம் சத்தியம் வாங்கிக் கொண்டு கிச்சா விஷயத்தை ஆரம்பித்தான். கிச்சா விஷயத்தை சொல்லி முடித்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கன்னுக்குட்டி கணேசன் பாட்டி சொல்லுகிற பழமொழியில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது.

விஷயம் இது தான். க்ளாமர் கிச்சாவை அவன் காலேஜில் ஒரு பெண் லவ் பண்ணிக்கொண்டிருந்திருக்கிறது, கிச்சா வேற பெண்ணை மனதுக்குள் டாவடித்துக் கொண்டிருந்தான். அது தெரிந்து கிச்சாவை டாவடித்த பெண் பூச்சி மருந்தை குடித்துவிட்டதாம். அவளைத் தான் கல்லிடை ஆஸ்பத்ரியில் சேர்த்திருப்பதாகவும், க்ளாமர் கிச்சா டெய்லி போய் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வருவதாகவும், அவர்கள் வீட்டில் இவன் கூடப் படிக்கிற பையன் என்பது மட்டும் தான் தெரியும். இதில் மருந்தைக் குடித்த பெண்ணும் கிச்சாவும் வேற வேற ஜாதி. கிச்சா மனதுக்குள் ரூட்டு விட்டுக்கொண்டிருக்கும் பெண்ணும் கிச்சாவும் ஒரே ஜாதி என்று கிச்சா சொல்லி முடித்தபோது எனக்கு தலையை சுற்றி உட்கார்ந்து விட்டேன். "டேய் அந்த கால பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து ஒரு நாட்டை சொல்லிட்டு ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி ஊருக்குள்ள வளையவர்றியேடா ...எப்படிடா இதெல்லாம்"ன்னு வாயை விட்டே கேட்டுவிட்டென்.

"டேய் அதெல்லாம் விடு இப்ப நான் என்னடா பண்ணட்டும் இத எப்படி சமாளிக்கன்னு தெரியலைடா...நீ தான் ஒரு ஐடியா சொல்லனும்"ன்னு க்ளாமர் கிச்சா ஒரே அழுவாச்சி.

நம்ம தெகிரியமெல்லாம் ஃபிகர் ஏதோ பெரிய மனது பண்ணி நம்ம சேட்டைகளை கண்டுக்காம போகிறவரையில் தான். திரும்பி பார்த்தாலே ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி வயத்தை கலக்கிவிடும். இதுல க்ளாமர் கிச்சா நேஷனல் அவார்ட் படத்துல வர்ற கலவர மேட்டரை வேற சொல்லிவிட்டு ஐடியா கேட்டதும் பேஸ்மென்ட் வீக்காகிவிட்டது. பின்னொரு நாளில் கிச்சாவை சந்திப்பதாக சொல்லிவிட்டு விட்டுக்கு வந்து போர்த்திப் படுக்கும் வரை நடுக்கம் அடங்கவில்லை.

அடுத்த நாள் முழுவதும் கிச்சா சொன்ன அந்த மேட்டரே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "க்ளாமர் கிச்சான்னு கரெக்ட்டா தான் கடவுள் அமைச்சிருக்கான்...நம்மளப் பார்த்து ஒரு பயபுள்ளையும் உருக மாட்டேங்குதே"ன்னு கண்ணாடியைப் பார்க்கும் போதேல்லாம் ஃபீலீங்க்ஸாய் இருக்கும். அப்புறம் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தால் தான் இந்த யோகம் கிட்டும் என்று நெற்றியில் சந்தனத் தீற்றல் வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

அதைப் பார்த்து கன்னுக்குட்டி கணேசனுக்கு சந்தேகம் வந்து நோண்ட, அப்புறம் ஒருத்தரிடமும் சொல்லக்கூடாதென்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு விஷயத்தை சொன்னேன். கன்னுக்குட்டிக்கும் ஜீரணமே ஆகவில்லை. க்ளாமர் கிச்சாவின் பிரச்சனையைவிட அவனுக்காக ஒரு பெண் மருந்து குடித்ததே எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.

"ஆளப் பார்த்து எட போடக்கூடாதுடா...எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவா...சந்தனதுக்கு வசிய சக்தி அதிகம்ன்னு.." கன்னுக்குட்டி இதுக்கும் பாட்டியை கூட்டி வந்து அன்றிலிருந்து அவனும் சந்தனப் பொட்டுவைத்துக் கொள்ளப் போவதாகவும் முடிவு கட்டினான்.

"டேய் போயும் போயும் நம்ம களாமர் கிச்சாவுக்காக மருந்தை குடிச்ச அந்தப் பெண்ணை எப்படியும் நாம பார்த்துரணும்டா " என்று கன்னுக்குட்டி வெறி வந்துவிட்டது. சும்மா ஆஸ்பத்திரிக்குள்ள போய்விடலாம் ஆனா எந்தப் பெண்ன்னு எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கொஞ்சம் சவாலாய் இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. எப்படியும் ஏதாவது அஜால்ஸ் குஜால்ஸ் பண்ணி அந்தப் பெண் முகத்தை பார்த்துவிடுவதென்று நானும் கன்னுக்குட்டியும் தீர்மானம் பண்ணினோம்.

நல்ல பிஸி நேரமாய் போவதென்று அடுத்த நாள் சாயங்கால நேரத்தை தேர்ந்தெடுத்து போனால் நினைத்தது மாதிரியே கூட்டமாய் இருந்தது. ஒரு தரம் வார்ட் முழுவதும் நடந்துபோய் நோட்டம் விட்டுப்பார்த்தும் காலேஜ் பெண்ணின் ரூமை கண்டுபிடிக்கமுடியவில்லை. ரெண்டாம் தரம் பார்க்கலாம் என்று முடிவுகட்டிய போது அங்கிருந்த நர்ஸுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

"என்னப்பா யார பார்க்கனும்"ன்னு தோரணையாக கேட்டவுடன், எனக்கு சைக்கிளைப் பூட்ட மறந்தது நியாபகதுக்கு வந்து கன்னுக்குட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். வெளியில் போய் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது கன்னுக்குட்டி குழப்பமாய் வந்தான். "டேய் ஒரே ஒரு காலேஜ் பொண்ணு தான் இருந்ததாம் அதுவும் நேத்திக்கே டிஸ்சார்ஜ் ஆகியாச்சாம் ஆனா அதுக்கு கால்ல ப்ராக்ச்சராம்" என்று அவன் சொன்ன போது எனக்கும் குழப்பம் அதிகமாகிப் போனது. திரும்ப நினைக்க எத்தனிக்கையில் க்ளாமர் கிச்சா காப்பி தூக்கை தூக்கிக் கொண்டு ஒரு ரூமிலிருந்து வந்துகொண்டிந்தான். எஙகளை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. அவனை கூட்டிக் கொண்டு போய் பக்கத்திலிருந்த மூத்திரசந்தில் விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்ததில் அவன் சித்தப்பாவிற்கு டைபாய்டு என்று சேர்த்திருப்பதாகவும், காப்பி டிபன் வாங்கிக்குடுக்க டெய்லி சாயங்காலம் வருவதாகவும், கிச்சாவை நினைத்து உருகி உருகி மருந்துகுடித்த பெண் இவன் மன அபிலாஷை என்றும் ஆனால் இவன் ஒரு பெண்ணை டாவடிப்பது மட்டும் உண்மை என்றும் ஆனால் அவள் யார் என்பது மட்டும் சொல்லவே மாட்டேன் என்று பொல பொலவென்று கக்கிவிட்டான். எங்களுக்கு வந்த ஆத்திரத்தில் நல்ல திட்டி நொறுக்கிவிட்டு மீதத்தை அடுத்த நாள் ஆல் இந்தியா மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாமென்றும் கிளம்பிவிட்டோம்.

கன்னுக்குட்டி கணேசனை பின்னாடி வைத்துக் கொண்டு அழுத்தமுடியாமல் அழுத்திவரும் போதும் அவனுக்கு தாங்கவில்லை. "ஆமை வீட்டைக் கெடுக்கும் ஊமை ஊரைக் கெடுக்கும்"ன்னு திரும்பவும் பாட்டியை மேற்கோள் காட்டினான்.

அப்புறம் நாங்கள் சநதனப் பொட்டு வைத்துக்கொண்டு, எங்களுக்காக யாராவது உருகி மருந்தைக் குடிப்பதற்க்கு பதிலாக எங்களின் நாமக்குரங்கு அவதாரத்தைப் பார்த்து, கொடுமை தாங்க முடியாமல் யாரவது பூச்சி மருந்தைக் குடித்துவிடுவார்களென்று சந்தனப் பொட்டு ஐடியாவை கேன்சல் செய்துவிட்டோம்.ஆனால் இன்று வரை சந்தனப் பொட்டு இட்டுக்கொண்டு வரும் க்ளாமர் கிச்சாக்களின் பேச்சை மட்டும் லேசில் நம்புவதில்லை.

Monday, November 10, 2008

அம்மமா சினிமா

மிகவும் பிடித்த ஒரு டாப்பிக்கில் தொடர் விளையாட்டிற்கு அழைத்த மகேஷ்க்கும், கைப்பிள்ளைக்கும் மிக்க நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

சும்மாவே கொசுவத்தி சுத்தறதுக்கு கேக்கவேண்டாம்..இதுல இந்த மாதிரி வேற கேட்டா?...நினைவு தெரிந்து பார்த்த முதல் சினிமா எனபதை விட நினைவு தெரிந்து மனதில் பதிந்த ஒரு சினிமா பற்றிய உண்மை சம்பவம். ரொம்ப சின்ன வயது என்பதால் தனியாக சென்று தியேட்டரில் சினிமா பார்ப்பதற்கு பெர்மிட் கிடைக்காத மூக்கை ஒழுகிக் கொண்டு டவுசரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த காலம் அது. ராஜா ராணி, உம்மாச்சி(சாமி) படங்கள் என்றால் உயிர். எங்க ஊர் கல்யாணி தியேட்டரில் வெற்றி விநாயகர் (அல்லது விநாயகர் துணையா என்று சரியாக நியாபகமில்லை) படம் போட்டிருந்தாரகள். பக்கத்து ஊரில் சொந்தக்கார வீட்டில் விசேஷம். குடும்பத்தோடு எல்லோரும் போயிருந்தோம். மாமா பையன் ஒருவன் என்னை விட மூன்று நாலு வயது பெரியவன், ஆனால் தனியாக தியேட்டர் போவதற்க்கு பெர்மிட் வைத்திருந்தான். என்னையும் அவன் தம்பியையும் இழுத்துக் கொண்டு, திரும்ப எங்க ஊருக்கு வந்து படத்துக்கு போய்விட்டோம். முக்கால் வாசி தரை அல்லது பெஞ்ச் டிக்கெட்டுக்குத் தான் காசு இருக்கும். அன்றைக்கு தரை டிக்கெட்டில் தெலுங்கு டப்பிங்கில் விநாயகர் தரிசனம். விநாயகர் வீட்டில் கோவித்துக் கொண்டு காட்டிற்கு தவம் பண்ண போகிறார். அப்போது வழக்கம் போல் ஜெயமாலினி விநாயகர் இருக்கிறாரே என்று வெட்கமே இல்லாமல் சிறு துணியை அணிந்து கொண்டு, கையில் ஒரு ஆப்பிளையும் வைத்துக் கொண்டு ஆடுகிறார். சரி இதோ டேன்ஸை முடித்துவிடுவார் என்று பார்த்தால் ஜெயமாலினி ஆப்பிளை கன்னம், மற்றும் இன்ன பிற இடங்களில் வைத்துக் கொண்டு சிம்பாலிக் ஆனந்த நடனம் புரிகிறார். வேறு வழியில்லாமல் அப்புறம் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டைக் கண்ணால் பாட்டு முடிந்துவிட்டதா என்று பார்த்தேன். விநாயகரும் என்னை மாதிரி கண்ணை மூடிக்கொண்டு பாவ்லா காடிக்கொண்டிருந்திருப்பார் போலும், பாட்டு முடிய கொஞ்ச நேரமாகிற்று. படம் முடிந்து மாமா பையன் வீட்டுக்கு போனால் அங்கே விசேஷ வீட்டில் எல்லாரும் எங்களை தேடிக்கொண்டிருந்ததாகவும், பதறிப் போனதாகவும் பயங்கர டோஸ். அப்புறம் எங்க வீட்டுக்கு வந்தால் இங்கேயும் பயங்கர டோஸ். என்னுடைய இரண்டாவது அக்கா வேறு பனிஷ்மெண்டாக பாட புஸ்தகத்தை எடுத்து வரச் சொல்லி விதி பட சுஜாதா மாதிரி ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு பெண்டை நிமிர்த்திவிட்டார். அப்புறம் கடைசியில் போனது விநாயகர் படம் என்றவுடன் அக்காவிற்கு பயம் வந்துவிட்டது. அக்கா பயங்கர விநாயகர் பக்தை. ஷாம்பூ வாங்குவதிலிருந்து டீச்சர் வரவில்லை என்பது வரை விநாயகர் மேல் சத்தியம் பண்ணினால் தான் ஒத்துக் கொள்வார். விநாயகர் மேல் அவ்வளவு லவ்ஸ். அப்புறம் அவர் விநாயகருக்கு நமஸ்காரம் செய்து ஆன்டி க்ளைமாக்ஸாகிப் போனது. சே இத முதலிலேயே சொல்லியிருந்தால் அவ்வளவு சேதாரமாகிப் போயிருக்காதே என்று இன்றுவரை அடிக்கடி எனக்குள் சிரித்துக்கொள்வேன். அதோடு ஜெயமாலினி ரஜினி லகலகலகலகலகன்னு சொல்லுகிற மாதிரி உடம்பெல்லாம் குலுங்க ஒரு ஸ்டெப் போடுவார் பாருங்கள் நரசிம்மராஜுலுவின் எல்லா படத்திலும் பார்க்கலாம்.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

23ம் புலிகேசி. இந்தியா சென்றிருந்த போது என்னுடைய மகள்களுக்கு அங்குள்ள தியேட்டரை காட்ட கூட்டி போயிருந்தேன். அந்த முறை சென்னை செல்லவில்லையாதலால் அம்பையில் தியேட்டருக்கு போயிருந்தோம். வெற்றிகரமான நூறாவது நாள் என்று போஸ்டர் அடித்துவிட்டார்களே என்று அந்த தீயேட்டரில் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். மொத்தம் பதினைந்து பேர்கள் எங்களையும் சேர்த்து. உட்கார்ந்த இடத்தில் ஃபேன் போடவில்லையாதலால் ஃபேனை தேடி தேடி உட்காரவேண்டியிருந்தது. அப்பவும் புலிகேசி வரும் போது மஞ்சள், சிவப்பு பல்பெல்லாம் எரிய விட்டு ஸ்பெஷல் எபெஃக்ட் காட்டி மெருகேற்றிக்கொண்டிருந்தார்கள். எக்ஸ்ட்ரா ஸ்பீகரில் காது ஜவ்வு தான் கிழிந்துவிட்டது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

எங்க விட்டு தியேட்டரில் வாரத்துக்கு எப்படியும் ஐந்து அல்லது ஆறு படம் கண்டிப்பாக ஓடும். அவ்வளவு சினிமா பைத்தியம் நான். பெயர் சொல்லாமல் - சமீபத்தில் வந்த ஒரு மூன்று நாலு படம் பார்த்தேன் ஆனால் இவற்றில் இரன்டு படங்களில் பாதியிலேயே தூங்கிவிட்டேன். எப்பேற்பட்ட அரதப் படத்தையும் உட்கார்ந்து பார்க்கும் நான் தூங்கியது தங்கமணிக்கு பயங்கர ஷாக். ஸ்க்ரிப்ட்டும் ஸ்ட்ராங்காக இல்லாமல் கதையும் வலுவாக இல்லாமல் எப்படி இவ்வளவு பைசாவை போட்டு படமெடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. 'இது....படம்' ன்னு சொல்ல வைக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தமிழ்படம் வந்து கொஞ்ச நாட்களாகிறது. ஜெயம்கொண்டான், ராமன் தேடிய சீதை நல்ல படங்கள் தான் ஆனால் அதுவும் இந்த ரகம் கிடையாது. "பொய் சொல்லப் போறோம்" ஆர்வத்தோடு பார்க்கக் காத்திருக்கிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய இருக்கிறது. ஐம்பது பைசாவுக்கு பெஞ்ச் டிக்கெட், இருபத்தியைந்து பைசாவுக்கு பெரிய மைசூர்பாகு என்று 75 பைசா பட்ஜெட்டில் நானும் ஒரு நண்பனும் பார்த்த கிருஷ்ணா தியேட்டர் ராஜா ராணி/ உம்மாச்சி படங்கள் மிகவும் தாக்கியிருக்கின்றன.

இது தவிர உன்னால் முடியும் தம்பி, சலங்கை ஒலி, அன்பே சிவம், மகாநதி, குருதிப்புனல். கமல் ரசிகனாயிருப்பதால் இந்த படங்களை சொல்லவில்லை. இந்த படங்களுக்கப்புறம் தான் கமல் ரசிகனானேன் இந்த படங்களைப் பார்த்த பிறகு ரசிகனாயிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் இதில் கமலின் குருதிப்புனல் தயாரிப்பு தைரியத்தைப் பார்த்து ரொம்ப மலைத்திருக்கிறேன். ஆடியோவிலேயே பல லட்சங்களை தமிழ் சினிமா பார்க்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் கமல், அர்ஜுன் மாதிரி பெரிய பெயர்களை வைத்துக்கொண்டு பாட்டே இல்லாமல் ஒரு முழு நீள ஆக்க்ஷன் படங்களை பண்ணுவதற்கு தில் வேண்டும். படத்தின் ட்ரைலர் பார்த்த நாள் முதாலாகவே படம் எப்போ வரப்போகிறது என்று ரொம்ப காத்திருந்தேன். எதிர்பார்ப்பு வீணாகவில்லை. ஆனால் அதற்கப்புறம் ஆக்க்ஷன் படமென்றால் கூட்டத்தோடும் தத்துவத்தோடும் ஒப்பனிங்க் சாங், பஞ்ச் டயலாக், க்ளைமாக்ஸ் பைட், நடுவில் ரெண்டு ஐயிட்டம் சாங் என்று தமிழ் சினிமா பழைய பார்முலாவுக்கே போய்விட்டது வருத்ததை அளிக்கிறது.

தாக்கிய வரிசையில் ரோஜாவிற்க்கு ஒரு முக்கிய இடம் உண்டு.(இந்த படத்தை பற்றி வேறொரு கேள்வியில்) பழைய படங்களில் நிறைய படங்கள் தாக்கியிருக்கின்றன. காதலிக்க நேரமில்லை மறக்க முடியாத ஒன்று.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

சுயநலத்தனாமாக இருந்தாலும் உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால் அன்றாட தமிழ் சினிமா அரசியல் எதுவும் என்னை பாதிக்காமல், என் வயிற்றிலடிக்காமல் இருப்பதால் என்னை எதுவுமே தாக்கவில்லை. இவற்றையும் செய்தியாக பார்த்திருகிறேனே தவிர ரொம்ப ஃபீல் ஆனது ஒரே ஒரு விஷயத்தில் தான். இந்தத் துறையில் காலூன்றி பெயர் வாங்குவ்து கஷ்டம் அதுவரை என்னதான் சூப்பராய் வேலை செய்தாலும் அது வேறொருவர் பெயரில் தான் அவரும் என்று கேட்டது ரொம்ப பாதித்தது. உறவினர் ஒருவர் மிக நன்றாக புகைப்படம் பிடிப்பார். சினிமா துறையில் ஒரு படத்தில் அவர் தான் ஸ்டில்ஸ் எடுத்ததாகவும் ஆனால் வேறொருவர் பெயரில் தான் படம் ரிலீஸானது என்று கேள்விப்பட்ட போது அதை ஜீரணிக்க முடியவில்லை. ஸ்டில்ஸே இந்த நிலையென்றால் அசிஸ்டண்ட் டைரக்ட்டர்களின் நிலை ஹூம்ம்ம்ம்ம்.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

சம்பவம் என்றால் சீரோ என்பதால், சம்பவம் என்பதை விஷயம் என்று மாற்றிக்கொள்கிறேன். உடனே நியாபகத்துக்கு வருவது காதலுக்கு மரியாதை க்ளைமாக்ஸ். ஒரு அழுத்தமான திரைக்கதை. ஃபாசிலின் மேல் எனக்கு மிகப் பெரிய மரியாதையை உண்டுபண்ணிய படம். இதை பல முறை பார்த்து நிறைய பாடங்கள் கற்று இருக்கிறேன். அதே போல் இந்த மாதிரி ஒரு காட்சிக்கு எப்படி பிண்ணனி இசை அமைப்பது என்று இளையராஜ ஒரு விரிவாக்கப் பாடமே எடுத்திருப்பார். அற்புதமான காம்பினேஷன்.

அதே போல் ரோஜா. மணிரத்னத்தின் திரைக்கதையமைப்பு இந்த படத்தில் சொல்லி மாளாது. பார்ப்பவரின் மனநிலையை கரெக்ட்டாய் திரைக்கதையில் எக்ஸ்ப்ளாயிட் பண்ணியிருப்பார். இந்த படத்தின் பிண்ணனி இசையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு புது ட்ரென்ட் செட்டராய் அறிமுகமான ஏ.ஆர்.ஆரின் ரிச்னஸ் இன்றும் இந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியப்பட வைக்கும். தீவிரவாதிகளின் தீவிரதத்தை இசையில் அப்படியே கொண்டுவந்திருப்பார். சவுண்ட் இன்சினியரிங் என்ற வார்த்தையை ஏ.ஆர்.ஆர். வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். மணிரத்தினம், ஏ.ஆர்.ஆர் காம்பினேஷனில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு படம் திருடா திருடா. இந்தப் படத்தின் "ராசாத்தி என் உசிரு என்னுதில்லை" என்னுடைய ஆல் டைம் பேவரிட்.

சமிபத்தில் வந்த தாம் தூம் பட சவுண்ட் இஞ்சினியரிங் சூப்பராய் இருக்கிறது. வீட்டில் ஹோம் தியேட்டர் இருந்தால் இந்த படத்தின் ஐங்கரன் ஒரிஜினல் டி.வி.டியை போட்டு பாருங்கள் நான் சொல்வது புரியும். டோல்பி 5.1 மிக்ஸிங்க ரசித்து பண்ணியிருக்கிறார்கள்.

இவை தவிர நிறைய தமிழ் படங்களில் தொழில்நுட்பம் பிடித்திருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலும் அந்த படங்கள் கமெர்ஷியல் வெற்றி பெறாததால் இந்த தொழில்நுட்பங்கள் உரிய கவனத்தைப் பெறாமல் போயிருக்கின்றன. உதாரணமாக ஓரம்போ படத்தின் எடிட்டிங் மற்றும் வசனம். எனக்கு மிக பிடித்தது. படமே ஒரு வித்தியாசமான லைட் ஹார்ட்டெட் களம். பாலுமகேந்திராவின் காமிரா கோணங்கள், பி.சி.ஸ்ரீராமின் லைட்டிங், தோட்ட தரணி மற்றும் சாபு சிரிலின் கலை சொல்லிக்கொண்டே போகலாம்.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்போ இரண்டு வருடமாய் ரொம்ப இல்லை. வீட்டில் தங்கமணி தான் பிலிம் நியூஸ் ஆனந்தி. முக்கியமான விஷயங்களை எல்லாம் கரெக்ட்டாய் சொல்லிவிடுவார். முன்னாடி லிங்க் எல்லாம் எடுத்துவைப்பார். சினிமா வண்டு, நண்டு, தவளை என்று எங்கிருந்தெல்லாமோ நாலெட்ஜ் டெவெலப் பண்ணுவார். எனக்கு இந்த விஷயங்களை விட அதோடு வரும் படங்களை எங்கிருந்து விஷயத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் கரெக்ட்டாய் எப்படி பிடிக்கிறார்கள் என்று தான் புத்தி போகும். அப்புறம் நான் படிக்கிற மாதிரி அதிலிருக்கும் படங்களை மட்டும் தான் பார்க்கிறேன் என்று இப்போ எங்கே படித்தார் என்பதைக்கூட சொல்ல மாட்டேங்கிறார். மிஸ்டர் மியாவ், லைட்ஸ் ஆன்....ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அட நீங்க வேற ஏங்க என் வாயக் கிளறிக்கிட்டு...


7. தமிழ்ச்சினிமா இசை?

உலகத் தரத்திற்க்கு கொஞ்சமும் சளைத்ததில்லை. பின்னிப் பெடலெடுக்கிறார்கள். தமிழ் சினிமா பெருமைப் படும் லெவலில் தான் இருக்கிறது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஓ நிறைய. கலைப் படங்கள் என்பதைவிட மற்ற மொழிகளில் பாப்புலர் தான் நிறைய பார்த்திருக்கிறேன். தெலுங்கு படம் பார்க்க ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் பொம்மரில்லு. அந்த படத்தின் ஒரு பாட்டை பார்த்துவிட்டு படத்தைப் பற்றி என்ன ஏதென்று தெரியாமல் வாங்கிப் பார்த்தேன். ஜனரஞ்சகமாக ஒரு விஷயத்தை எப்படி சொல்வதென்று பாடம் நடத்தியிருந்தார் இயக்குனர். அதே போல் மலையாளத்தில் தன்மாத்ரா. சமீபத்தில் வெட்னஸ்டே இந்திப் படம் பார்த்தேன். இரவு பதினொன்றரைக்கு ஆரம்பித்து ஒன்றரை வாக்கில் முடித்தோம். சமீபத்தில் என்னை மிக தாக்கிய படமாகிவிட்டது. படம் பார்த்துவிட்டு ஒரு அரைமணிநேரம் வெத்து ஸ்கிரீனையே பார்த்துக்கொண்டிருந்தேன். படத்தை கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். ஒரு இரண்டு மணி நேரம் கட்டிப்போட்டுவிடுவார் இயக்குனர். பாட்டு கிடையாது, சினிமாவுக்கே உண்டான பிலடப் கிடையாது, எந்த விஷயத்தையும் சுத்தி தொடுவதெல்லாம் கிடையாது. படம் விறு விறு விறுவென போய் முடியும் போது தான் உங்களுக்கே சுயநினைவு வரும் அவ்வளவு ஒன்றிப் போய்விடுவீர்கள். வெரி ஹைலி ரெக்கமெண்டட். ஆங்கில படங்களில் நிறைய. லார்ட் ஆப் த ரிங்க்ஸ் டாப்பில் இருக்கிறது. இந்த படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். 'தி வில்லேஜ்', 'லைப் இஸ் பியூடிபுல்' இன்னும் நிறைய இருக்கிறது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஹீ ஹீ நேரடி தொடர்பு கான்ட்ரிப்யூஷன் என்ற ரீதியில் இதுவரை இல்லை. சில பேரை தெரியும் என்ற வரையில் தான். ஆனால் ஒரு நாள் நான் ஒரு தமிழ் படம் கண்டிப்பாக இயக்குவேன். அது மேம்பட உதவுமா என்றெல்லாம் காலமும் மக்களும் தான் சொல்லவேண்டும். இந்த ரிஸ்க் எடுக்கத் தயங்கும் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் போன வருடமே போங்கடா நீங்களும் உங்க வேலையும்ன்னு தூக்கி எறிந்துவிட்டு சினிமா துறைக்குள் நுழைந்திருப்பேன்...பார்ப்போம்.


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரொம்ப நல்லாவே இருக்குன்னு நினைக்கிறேன். திறமைக்கு குறைச்சலே இல்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

இந்த சமாச்சாரங்கள் செய்திகள் பத்திரிகைகள்...etc இதையெல்லாம் விட்டுவிடுங்கள், சினிமா கிடையாது என்றால் வாரத்துக்கு ஆறு படம் பார்க்கும் என்னை மாதிரி அடிக்டுக்கு என்ன அகும்...? கை காலெல்லாம் விலுக்கு விலுக்குன்னு இஸ்துக்கும்.


இச்சங்கிலியைத் தொடர நான் அழைக்க நினைக்கும் ஐவர்.

வழக்கம் போல இங்கே வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும் தான். யாரெல்லாம் இதுவரை இந்த தலைப்பில் எழுதலையோ அவர்கள் எல்லாரையும் அழைக்கிறேன். எனக்குப் பிடித்த இந்த தொடரில் மற்றவர்களின் கருத்துக்களையும் ஆர்வத்தோடு படித்துக்கொண்டிருக்கிறேன் ஆகவே இதுவரை எழுதவில்லை என்றால் எழுதுங்கள். நன்றி.