Monday, October 29, 2007

சினிமா அவியல்

உங்களுக்கு காய்ச்சல் வந்திருக்கிறதா? கட்டாயம் வந்திருக்கும்! ஒரு வேளை இல்லையென்றால் ஒரு பெரிய வெங்கயாத்தைக் குறுக்கால வெட்டி இரண்டு கஷ்கத்திலும் வைத்து ஒரு இரவு படுத்தால் காலையில் காய்ச்சல் வரும். ஸ்கூல் அரையாண்டு பரீட்ச்சைக்குப் படிக்கவில்லையே என்ற கவலைக்கு ஒரு நண்பன் சொன்ன உபதேசம் தான் இது. நான் இதுவரை முயற்சி செய்ததில்லை. நீங்க வேணா பார்த்துட்டு சொல்லுங்க :)

இந்த ஒருவார காய்ச்சலுக்கெல்லாம் அஜீஸ் டாக்டர் தரும் பென்சிலின் ஊசி மற்றும் கசப்பான மருந்த்துக்கு மேல் மாமா சொல்லும் பிரிஸ்கிரிப்ஷன் "ல்ங்கணம் பரம ஔஷதம்" - அதாவது பச்சத் தண்ணி கூட வாயில படக்கூடாது. வயிறு ஒட்ட ஒட்ட கிடந்தால் நாலாவது நாள் சண்முக பவான் பரோட்டா சால்னாவிலிருந்து, பொதுவாக பார்த்தாலே குமட்டிக் கொண்டு வரும் கோதுமை ரவை உப்புமா வரை எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் தின்று தீர்க்கவேண்டும் என்ற பசியும் வெறியும் வரும். அந்த மாதிரி இந்தியாவிலிருந்து வந்த பிறகு எந்த ராஜா எந்த நாட்டை ஆண்டாலும் வாரத்துக்கு மினிமம் ஒரு சினிமா பார்க்காவிட்டால் எனக்கு காய்ச்சல் வருகிறது. இவற்றில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ப்ளாக் அடிக்க யோசிக்கும்போது நல்ல காரணங்களுக்காக நினைவில் நிற்பது மிகச் சில.

ஒரிஜினல் வந்த பிறகு தான் பார்பேன் என்று பிடிவாதமாக இருந்த சிவாஜி பார்த்த போது இதற்காகவா இவ்வளவு நாள் காத்திருந்தோம் என்று ஆகிவிட்டது. பாட்டும், ரஜினியின் மேக்கப் மற்றும் கெட்டபுகள் தவிர நீங்கள் ரஜினி ரசிகராயிருந்தால் தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இல்லையோ என்று தோன்றியது. ரஜினியிடம் அந்த பழய துள்ளலைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது. மற்றபடி படத்தில் இருத்ந பிரம்மாண்டமும் செய்திருக்கும் செலவையும் பார்க்கும் போது கூடக் கொஞ்சம் செல்வழித்து ரூம் போட்டு யோசித்து ஸ்கிரிப்டிலும் கதையிலும் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்கலாம் என்று தான் தோன்றியது. ஷ்ரேயா ஆக்சிடன்ட் ஆன அம்பாஸிடர் கணக்கா நெளித்து நெளித்து ஆடுகிறார்(நடக்கிறார்), வந்து போகிறார். சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ரொம்ப நாளாக பார்க்கவேண்டும் என்று நினைத்து சமீபத்தில் தான் பார்க்கமுடிந்த ஒரு நல்ல படம் "குப்பி". தொப்புளைக் காட்டும் ஒரு அயிட்டம் சாங், மசாலாவுடன் ஒரு கதை முடிச்சு, திருப்பம், அம்மா செண்டிமென்ட் என்று கதையமைப்பதற்கு கொஞ்சம் மெனெக்கெட்டால் போதும். ஆனால் முடிவு முதற்கொண்டு எல்லாமே எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மைச் சம்பவத்தை விறுவிறுப்பாக படமாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரையில் சவாலான விஷயம். சவாலை மிகத் திறமையாகக் கையாண்டு விறு விறுப்பாக எடுத்திருக்கிறார்கள். படத்தில் சிவராஜனாக வரும் இயக்குனர் (அப்பிடித்தானே?) பாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார். ஈ.ழ பிண்ணனி அதிகம் தெரியாத எனக்கு "நாங்கள் தவறு செய்திட்டோம் அதனால் தண்டனையை அனுபவிக்கிறோம்" என்று சொல்வது மட்டும் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தது. மும்பை குண்டுவெடிப்பை பிண்ணனியாக கொண்ட "ப்ளாக் ப்ரைடே" படத்தை விட இந்தப் படம் பல மடங்கு சிறப்பாக இருப்பதாக எனக்குப் பட்டது. அண்ணி மாளவிகா நடிப்பில் எனக்கும் ரொம்பவே நம்பிக்கையுண்டு. கலக்கியிருக்கிறார். ஒரு அழுத்தமான படம் எப்படி எடுக்கலாம் என்று இந்த திரைக் கதையிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

ஓ.கே ரகத்தில் நினைவில் நிற்பது இன்னொரு திகில் பேய்ப் படம் "சிவி". சமீபத்தில் திகில் படங்களே வராத நிலையில் இந்த படம் ஓ.கே சொல்லலாம். ஆனால் வர வர பேய்க் கதைகளெல்லாம் இப்போது போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. எல்லா பேய்ப் படங்களிலும் பெண் பேய்களையே காட்டுகிறார்கள். அதுவும் நம்மூரில் வரும் பேய்ப் படங்களிலெல்லாம் இந்தப் பேய்களை பெண்ணாயிருக்கும் போது யாராவது ரேப் செய்திருப்பார்கள் அது அப்புறம் பேயாகி அஷ்வினி ஹேராயில் விளம்பரம் மாதிரி தலையை விரித்துப் போட்டுக்கொண்டு பயமுறுத்தும். பயமுறுத்த வசதியாக தலையை விரித்துப் போட்டுக்கொண்டாலும் கதையிலாவது கொஞ்சம் வித்தியாசம் காட்டவேண்டாமா? பாதிரியார், மாதாக் கோயில் மணியோசை, ரேப் செய்வதற்கு முன்னால் ஒரு நெஞ்சை நக்குகிற பாட்டு, குழாயில் தண்ணீர் ரத்தமாகுகிற கண்றாவி, இன்னும் பேய்களெல்லாம் எத்தனை நாட்களுக்குத்தான் ஒயிட் கலர் ராசாத்தி நைட்டி மற்றும் கவுனை மட்டுமே போட்டுக்கொண்டு உலாத்துமோ தெரியவில்லை(இதில் வெளிநாட்டு பேய்களும் விதிவிலக்கில்லை)...இதுல மூனு நாலு டப்பா நைசில் பவுடரைவேறு முகத்தில் அப்பிக்கொண்டு ரா..ரா ஜோதிகா மாதிரி கண் மை வேறு. ஏம்பா புதுசா ஐடியாவே கிடக்கலையா..இல்லை படமெடுக்கிற உங்களுக்கெல்லாம் கல்யாணமாகவில்லையா? - பார்முலாவா மாத்துங்கப்பா. புதுமுகங்கள் நடிப்பில் மெனெக்கெட்டு இருக்கிறார்கள். ஓ.கே ரக கதைக்கு திரைக்கதை மிக உதவியிருக்கிறது, திரைக்கதைக்கு சபாஷ் சொல்லலாம்.

சத்தம் போடாதே - இயக்குனர் வசந்த் என்பதால் எதிர்பார்ப்பு நிறைய இருந்தது. படம் மீண்டும் ஓ.கே ரகம். திரைக்கதையை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் கதை சம்பிரதாய க்ளைமாக்ஸ் எதுவுமில்லாமல் டக்கென்று முடிந்துவிடுகிறது. உண்மைக்கதை அப்பிடி இருப்பதால் அவ்வாறு அமைத்திருக்கலாம். அனால் மசாலா இல்லாத ஒரு விறுவிறுப்பான க்ளைமாக்ஸ் இருந்திருந்தால் சபாஷ் போட வைத்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. காதல் கோட்டையில் அவ்வளவு பில்டப் ஏற்றி...கடைசியில் தேவயாணி ட்ரெயினிலிருந்து டோய்ங் என்று குதிக்கும் போது இவ்வளவு சிம்பிளாக முடித்துவிட்ட்டார்களே என்று எனக்கு ஒரு ஏமாற்றம் வந்தது...அதே தான் இங்கும் தோன்றியது. பிருத்விராஜ் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. பஞ்ச் டயலாக், அலட்டலான நடிப்பு எதுவிமில்லாமல் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எனக்குள் பட்சி சொல்கிறது. இப்போதைக்கு எங்கள் வீட்டில் எல்லாருக்கும் ஃபேவரிட் ஆக்டர் இவர் தான்.

அடுத்து தலைவர் படத்தை தவிர ரொம்ப எதிர்பார்ப்போடு காத்திருக்கும் படம் "ஓரம்போ". ட்ரைலர் முன்னோட்டத்திலே எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று. மும்பை (நானாபடேகர்) படங்களின் சாயலில் பட்டையக் கிளப்பியிருக்கிறார்கள். எப்படி வந்திருக்கிறதோ என்று ஆர்வம் மேலோங்குகிறது. ஐய்யா சாமி சொதப்பிடாதீங்கப்பூ.

Wednesday, October 24, 2007

ஹாலிடே-3

முதல் நாள் பீச் பீச்சாக சுற்றினோம் என்று சொன்னேன் அல்லவா, சாப்பாடு பற்றி சொல்லவே இல்லையே. முதல் நாள் கிளம்புவதற்கு முன்னாலே தங்கமணி வீட்டில் பாவ் பாஜி செய்து டப்பாவில் எடுத்துக் கொண்டுவிட்டதால் வழியிலேயே சர்வீஸ் ஸ்டேஷன்களில் நிப்பாட்டி சாப்பிட்டோம் . "என்ன தான் சொல்லு உன் கையால சமைச்ச சாப்பாட்டுக்குப் பக்கத்துல இந்த பர்கர் கிங்லாம் பிச்சை தான் எடுக்கனும்"ன்னு ஏத்திவிட்டு கூட கொஞ்சம் பாவ்பாஜியை நொக்கிவிட்டதில் காரில் ஏறி உட்கார்ந்ததும் சொக்கிவிட்டது.

"நாளைக்கு டிபனுக்கு பேசாம சன்னா மசாலாவும் சப்பாத்தியும் செஞ்சிக்கலாம் கையிலயும் எடுத்துட்டு போனா இதே மாதிரி அங்கங்க நொக்கறதுக்கு வசதியா இருக்கும்"ன்னு சொல்லுவதற்க்குள் தங்கமணி உண்ட மயக்கத்தில் தொண்டி ஆகியிருந்தார். அன்று நாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே அழகான விளையாடும் இடம் இருந்ததால் அதில் எல்லாரும் விளையாடிக் களைத்து அடுத்த நாள் வழக்கம் போல எட்டு மணிக்கு எழுந்து அரக்கப் பரக்கக் கிளம்பினோம்.

அடுத்த நாள் சப்பாத்தி, சன்னா மசாலா நினைப்பில் வேல்ஸ் மண் விழுந்தது. எதற்க்கும் இருக்கட்டும் என்று எடுத்து வந்திருந்த கார்ன் ப்ளேக்ஸ் பாலுடன் பெப்பரபேன்னு முழித்துக் கொண்டிருந்தது. "இன்னாது கார்ன் ப்ளேக்ஸா...இதுக்குத் தான் கடுகு, மஞ்சப் பொடி, சன்னான்னு டின்னு கட்டினியா...அப்போ அதெல்லாம் வேஸ்டா..." என்று மனு போட..."வேண்டாம் வேஸ்டாப் போக வேண்டாம் அந்த கார்ன் ப்ளேக்ஸ குடுங்க...அதிலயே தாளிச்சிக் கொட்டி சன்னாமசாலவையும் போட்டுத் தரேன் சாப்பிடுங்க"ன்னு அந்தக்கால வில்லன் மாதிரி தங்கமணி மிரட்ட ஆரம்பித்துவிட்டார். " ஐயய்யோ அதுக்கு எங்க மாமியார் செய்யற ரசத்தையே குடிச்சிரலாம்.. சரி சரி சமாதானம்..இதுக்குத் தான் நான் முதல்லயே கடுகு மஞ்சப் பொடியெல்லாம் எடுத்துட்டு வர வேண்டாம் வெறும் கார்ன் ப்ளேக்ஸ், மெக்டோனால்ட்ஸ்ன்னு மேனேஜ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன்"- என் டயலாகின் முதல் பகுதி தங்கமணி காதில் விழாததால் வேறு எந்த பிரச்சனையுமில்லாமல் ஊர் சுத்த கிளம்பிவிட்டோம்.

இரண்டாம் நாள் குழந்தைகளுக்காக டயனோசர் பார்க், கேம்ஸ் பார்க் என்று சுத்தி விட்டு மூன்றாம் நாள் மீண்டும் காடு மலைன்னு கண்ணன் தேவன் டீ வாங்கப் போன மாதிரி சுத்தினோம். அன்றைக்கு கற்காலத்துக்கு பிறகு வந்த இரும்புக் காலத்தில் மக்கள் வாழ்ந்த மாதிரி செட் செய்திருந்த ஒரு இடத்துக்குப் போனோம். இன்றைய நவீன யதிரங்களோ ஆயுதங்களோ எதுவும் உபயோகப்படுத்தாமல் அந்தக் காலத்தில் எப்படி வாழ்ந்திருப்பார்களோ, அவர்களுக்கு என்ன ஆயுதங்கள் இருந்திருக்குமோ அதைக் கொண்டு அந்த இடத்தையும் வீடுகளையும் மீண்டும் உயிர்பித்திருந்தார்கள். வந்திருந்த வெள்ளைக்கார மாமாக்களும் மாமிக்களும் வாயைப் பொளந்து கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு நம்மூர் கிராமங்களை திரும்ப பார்த்த மாதிரி இருந்தது. இன்னும் நம்மூர் கிராமங்கள் அந்தக் காலத்து வசதிகளுடனே இருப்பதை எண்ணும் போது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

பிறகு அடுத்த நாள் ஸகந்தவேல் கோவிலுக்குப் போனோம். எனக்கு சாமியைப் பார்க்கும் ஆர்வத்தை விட அங்கேயே முழுக்க முழுக்க இருக்கும் மந்திரம் சொல்லும் வெள்ளைக்காரர்களைப் பார்ப்பதற்கே ஆர்வமாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே தெரியாத ஒரு காட்டு வழியாகப் பயணம். ஒரு ஒத்தயடிப் பாதையில் தான் காரே போகவேண்டும். வழியிலேயே போலீஸ் காரை நிப்பாட்டிவிட்டது. "ஐயையோ நான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துவதைத் தவிர எந்தத் தப்பும் செய்யலையே" என்ற எனது உதறலைக் கண்டுகொள்ளாமல் ஃபூட் அன்ட் மவுத் நோயினால் அந்தக் கோவிலில் மேலும் இரண்டு மாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று அவற்றைக் கொன்(ண்)று போக வந்திருந்தார்கள். இதற்க்கு முன் சம்பூ என்று மாடு நோயுற்று அது பெரிய பிரச்சனையாகிவிட்டதால் இந்த முறை அவற்றை நீக்கும் வரை யாரையும் கோவில் பக்கமே அனுமதிக்கவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு அனுமதித்தார்கள்.

எங்களை மாதிரியே கார்டிஃப்லிருந்து கோயிலுக்கு ஏழு பேர் கொண்ட தமிழ் கூட்டம் வந்திருந்தது. அதில் எல்லோரும் நர்ஸாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். பார்த்தவுடனேயே நட்பாகி ஜாலியாகப் பேசிப் பழக ஆரம்பித்துவிட்டதால் காத்திருப்பு போரடிக்காமல் இருந்தது.

நோய்க்குப் பலியான மாடுகளுக்காக அன்று பூஜை நடைபெறவில்லையாதலால் வெள்ளைக்காரன் "ஓம் சுவாகா" மந்திரம் சொல்லுவதைக் காணக் கிடைக்கவில்லை. ஆனால் கோயிலில் வேறு ஒரு அங்கியணிந்த பூசாரி அம்பாளின் மகிமையைப் பற்றியும், ஜனனம் மரணம் பற்றிய தத்துவங்களையும் எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருந்தார். பொதுவாகவே இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். இருந்தாலும் ப்ளாக்க்கு எதாவது மேட்டர் தேறுமான்னு கவனமாகக் கேட்டும் ஒன்றும் புரியவில்லை.


கோவிலில் கார்டிப் நர்ஸ் நண்பர்களுடன் எல்லா இடங்களுக்கும் போனோம். பேச்சுவாக்கில் "நீங்க இண்டர்நெட்டில் ப்ளாக்லாம் படிப்பீர்களா...நான் கூட "டுபுக்கு"ங்கிற பெயரில் ஒரு ப்ளாக் வைத்திருக்கிறேன்" என்று ஒரு நண்பரிடம் பிட்டைப் போட ஆரம்பிப்பதற்குள் நண்பர் இடைவெட்டினார்.. "எங்கங்க....அதெல்லாம் ஒரு காலம்...கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி நான் கூட "நைஸ் கை"ங்கிற பெயரில் ராத்திரி பகல்ன்னு பாராம ஃபிகருங்க கிட்ட சேட்டில் நிறைய கடலை போட்டிருக்கேன்..இப்போ அதுக்கெல்லாம் ரொம்ப நேரமில்லைங்க" என்று நண்பர் பதில் சொல்லி "கல்யாணமாகியும் இன்னமுமா இதையெல்லாம் கண்டினியூ பண்றன்றீங்கன்னு ஒரு லுக்கு விட்டார் பாருங்கள். தஙகமணிக்கு என்ன்னோட தன்னடக்கம் ப்ளாப்பானது சிரிப்பான சிரிப்பு. அப்புறம் நண்பரிடம் "ஐய்யைய்யோ இது அந்த மாதிரி மேட்டரில்லைங்க வேறங்க..இது ப்ளாக்குன்னு..." ஒரு மாதிரி அசடு வழிந்துகொண்டே சமாளித்தேன். ஆனாலும் அவர்களெல்லாம் மிக இனிமையான நண்பர்களாகி இப்பவும் அப்பப்போ ஃபோன் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறாக வேல்ஸ் ட்ரிப் இனிதே நிறைவடைந்தது.

முதல் நாள் கார்ன் ப்ளேக்ஸுக்குப் பிறகு தங்கமணி அதற்கடுத்த நாட்களில் சப்பாத்தி, சன்னாமசாலா, மற்றும் புளியோதரை செய்தார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு விடுகிறேன் (ஆங்..அப்புறம் வாங்கிக் கட்டுறது யரு?)




Tuesday, October 23, 2007

நான் இனிமேல்....

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.