Friday, September 22, 2006

நெல்லை சந்திப்பு விபரங்களும் படங்களும்

மொத்தம் ஆறு பேர் வருவதாகச் சொல்லியிருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது மணிக்கு சந்திப்பதாக பேசிக்கொண்டோம். இதில் வீட்டிலிருந்து தங்கமணியையும் குழந்தைகளையும் வேறு கூட்டி வரச் சொல்லியிருந்தார்கள். கடைசி நேர குழப்பங்களலால் அவர்களை கூட்டிச் செல்ல முடியவில்லை. என்ன ட்ரெஸ் போட்டுக் கொள்ள என்பதிலிருந்து எல்லாமே கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து ஒரு மணிநேரம் ஆகும் என்று எதற்கும் இருக்கட்டும் என்று ஏழு மணிக்கே கிளம்பிவிட்டேன்.

எல்லோரும் வந்தவுடனே அங்கிருந்து சாப்பிடப் போகலாம் என்று பேசிவைத்திருந்தோம். சந்திப்பிற்கு எட்டு மணிக்கே போய்சேர்ந்துவிட்டேன். என்னைத் தவிர ஒருவரும் வரவில்லை. அதற்குள் பக்கத்தில் நல்ல ஹோட்டல் தேடி போண்டால்லாம் ஸ்டாக் இருக்கா என்று விசாரித்து வைத்தேன். அப்புறம் நேராக சந்திப்பதாக பேசிக் கொண்ட இடத்திற்கே போய்விட்டேன். என்னை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று மிக நிச்சயமாகத் தெரிந்தது. சுதந்திர தினம் நெருங்கிக் கொண்டிருந்ததால் அங்கங்கே போலீஸ் தலைகளைப் பார்க்க முடிந்தது. முதலில் என்ன பேசுவது என்று ஒத்திகை பார்த்துக்கொண்டேன். நேரம் ஆக ஆக எனக்கு டென்ஷன் அதிகரித்தது. கைத்தொலைபேசி இல்லாததால் ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தமிழ்மணம் நட்சத்திர முறை சரிதானா, தேன்கூடு போட்டியில் இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா என்றெல்லாம் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சரியாக ஒன்பதேகாலுக்கு நெல்லை எக்ஸ்ப்ரெஸ் ட்ரெயின் வந்தது. இரண்டு அக்காக்கள், அக்கா குழந்தைகள் என்று மொத்தம் சரியாக ஆறு பேர். அக்கா பையன் கூட்டத்தில் ஒளிந்து கொண்டிருந்த என்னை மிகச் சரியாக கண்டுபிடித்து விட்டான். "என்னாங்கடி விளையாடுறீங்களா..ஒரு மனுஷன் எவ்வளவு நேரம் தான் காத்துகிடப்பான்...இன்னமும் உங்களுக்கெல்லாம் பொறுப்பே வரலை போலிருக்கே ஊர்லேர்ந்து வந்த தம்பிய பார்க்க இப்படியா ஆடி அசைஞ்சு வரது? " என்று ஒத்திகை பார்த்த வசனத்தை பேசி வாங்கிக் கட்டிக் கொண்டு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வீடு சென்றோம்.

நெல்லை சந்திப்பு புகைப்படம் காண இங்கு சுட்டவும்.


பி.கு - என்ன செய்யறதுங்க...நெல்லைப் சந்திப்ப இப்படித்தான் ஒப்பேற்ற வேண்டியிருக்கிறது. சந்திப்பை அறிவித்த இரண்டு வாரத்துக்கு மருந்துக்கு கூட யாரும் அதைப் பற்றி மெயில் அனுப்பவில்லை. அம்பி வேறு இது தெரியாமல் டோட்டல் டேமேஜ் செய்து கொண்டிருந்தார். கவுண்டமணி பாணியில் "யெப்பா போதும்ப்பா..ப்லிம் அந்து போச்சு..நிப்பாட்டுப்பா..பின்னியெடுத்துட்டாங்க" என்று சொல்லியும் அவர்பாட்டுக்கு சமாளித்துக் கொண்டிருந்தார். இந்த லட்சணத்தில் சிவஞானம்ஜீ வேறு அவர் பங்குக்கு எண்ணையை ஊற்றிக்கொண்டிருந்தார். அட ஏங்க இந்த கொலைவெறி ...இங்க நானே சொந்த செலவுல சூன்யம் வைச்சிக்கிட்டு எடுக்கிறது தெரியாம திண்டாடிக்கிட்டு இருக்கேன் என்று நொந்து போயிருந்த சமயத்தில்.. வலைப்பதிவுகளை வாசிக்கும் நண்பர் சங்கரபாண்டி மட்டும் நான் பதினோராம் தேதி தான் அந்தப்பக்கம் வருவேன் அந்த தேதியில் வைத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டிருந்தார். பட்சி சிக்கிக்கிச்சு என்று எனக்கு ஒரே சந்தோஷம். ரொம்ப கஷ்டம்..இருந்தாலும் உங்களுக்காக பெரிய மனது பண்ணி மாற்றுகிறோம் என்று பதிலனுப்பியும் மனுஷன் கடைசி நேரத்தில் கடுக்கா கொடுத்துவிட்டார். ஹூம் கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து ..கிளி பறந்து போயிடுத்தூ... ஒரு வேளை எனக்கு ஜாதகத்துல போண்டா தோஷம் இருக்குமோ??

Tuesday, September 19, 2006

மலையாளக் கரையோரம்

எங்க ஊருக்கு மிகப் பக்கத்திலிருந்தும் இந்த முறை தான் கேரளாவில் காலடி எடுத்துவைத்தேன். சும்மா சொல்லக் கூடாது...நாகர்கோவிலைத் தொடும் போதே வித்தியாசத்தை உணர முடிகிறது. நாகர்கோவிலில் காற்று அள்ளுகிறது. கேரளா பச்சை பசேலென்று ஜிலு ஜிலுவென்று அழகாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தென்னை மரங்களைப் பார்க்க முடிகிறது. ஆனாலும் இளநி பத்து ரூபாய்க்கு தான் விற்கிறார்கள். பெண்களெல்லாம் அப்போது தான் குளித்த மாதிரி முடியை மழைப் பின்னல் போட்டுக் கொண்டு நெற்றியில் சந்தன தீற்றலுடன் ப்ரெஷ்ஷாக இருக்கிறார்கள். கேரள மக்கள் ரொம்ப கறாராக இருக்கிறார்கள். பேரமெல்லாம் ரொம்ப பேசமுடிவதில்லை. ஆனால் சென்டிமென்டுக்கு மடிகிறார்கள். ஏர்போர்ட்டில் நான் தின்று கொண்டிருந்த வாழைப்பழத்தை அவசரமாக வாயில் ஒதுக்கிக் கொண்டு பேசியதில் மலையாளி என்று நினைத்துக்கொண்டு கொண்டு சம்சாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் பார்த்த மலையாளப் படங்களில் டயாலாக் ஞானம் ரொம்ப இல்லாததால் எல்லாத்துக்கும் முன்னாடியோ பின்னாடியோ ஒரு ஓ பொட்டுக் கொண்டு அஃறினையில் பேசி "கோப்பியோ", "சாயாவோ", "ஓ பத்து ரூபாயோ" "இங்கன வரும்", "அங்கன போகும்" என்று மலையாளி மாதிரி ஆக்ட் கொடுத்தது கொலையாளி லுக்கில் போய் முடிந்தது.
இருந்தாலும் மாமியார் வீட்டு ரசப் பொடி ஏர்போர்ட்டில் மாட்டிக்கொண்ட போது இந்த அரகுறை மலையாளமும் கைகொடுக்கவில்லை. டக்கென்று தங்கமணி முழுகாம இருக்கிறார், மூன்று மாதம், இது பிரசவ லேகியப் பொடி என்று சரடு விட்டது வொர்க் அவுட் ஆகியது. "எந்தப் பொண்ட்டாட்டிய்யா பிரசவம்?" என்று சந்தேகப்படாமல் "எனக்கே இந்த விஷயம் இப்போத் தான் தெரியும்" என்று தங்கமணியும் சமத்தாக முகத்தை வைத்துக் கொண்டு கூட சேர்ந்து ஆக்ட் விட்டதில் ரசப் பொடி தப்பித்து நேற்று கூட வீட்டில் தக்காளி ரசம் பிரமாதமாக வந்தது.

திருநெல்வேலி மாவட்டம் நிறையவே மாறிவிட்டது. எங்க ஊரில் எல்லாரும் வீட்டை இடித்து புதுமாதிரியாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் நக்கலுக்கு குறைச்சலே இல்லை. உள்ளாடை கடையில் "பத்து பனியன் ஜட்டி குடுப்பா" என்றால் "என்ன சார் துபாயா அமெரிக்காவா " என்று கேட்கிறார்கள். "ஏன் உள்ளூர்ல ஒருதனும் போடறதில்லையா..பனியன் ஜட்டியெல்லாம் எக்ஸ்போர்ட்டுக்கு ஒதுக்கிட்டு எல்லாரும் லங்கோட்டுக்கு மாறிட்டாங்களா?"ன்னு பதிலுக்கு கேட்டால் " நாஙகளெல்லாம் ரெண்ட வாங்கி ரொட்டேஷன்ல விடுவோம்...ஜட்டி விக்கிற விலைக்கு உங்கள மாதிரி பத்து இருபதுன்னு ஹோல்சேல்ல வாங்க மாட்டோம்" என்று அங்காலய்த்தார் விற்பனையாளர். சரிதான் இவன் தங்கமணிக்கு மேல இருப்பான் போல இவன் கிட்ட வாயக் குடுத்து வாங்கிக்கொள்ளக்கூடாது என்று சத்தம் போடாமல் வாங்கி வந்துவிட்டேன்.

நம்ம யோகம், எல்லாம் வாங்கி முடித்த அடுத்த நாள் போத்தீஸில் ரெண்டு வைகிங் ஜட்டி வாங்கினால் ஒரு டின்னர் பவுல் ப்ரீ என்று போட்டிருந்தார்கள். நாம வாங்கின எண்ணிக்கைக்கு டின்னர் செட்டே சேர்த்திருலாமே என்று எனக்கு ஒரே வயத்தெரிச்சல். அவன் பேசின பேச்சுக்கு "பேசாம கலர் மேட்சிங்கா இல்லை" என்று திரும்பக் குடுத்து இத வாங்கிடலாமா என்ற எனது யோசனை என்னமோ தங்கமணிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை தலையிலடித்துக் கொண்டார். ஹூம் சட்டிக்கு சட்டியுமாச்சு..ஜட்டிக்கு ஜட்டியுமாச்சு..என்று டயலாக் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் "இந்த ஆஃபரெல்லாம் ஒரு நாள் முன்னாடி போட மாட்டீர்களா" என்று போத்தீஸ்காரர்களை திட்டிவிட்டு "சட்டி சுட்டதடா...." பாட்டு பாடிக் கொண்டு வந்தேன்.

Thursday, September 14, 2006

பிலிப்ஸ், சூர்யா, ஜி.ஈ, விப்ரோ, ஓஸ்ராம்..

யாரப் பார்த்து என்ன வார்த்தை பேசற....இன்னும் எத்தனை வெள்ளைக்காரி நைட் அவுட் கேக்கறாங்க தெரியுமா? மார்க்கெட் வேல்யூ அப்பிடியே நிக்குது மா...இந்த தரம் ஊருக்குப் போயிருந்த போது கூட எத்தன மாமிகள் என்கிட்ட வந்து ஜாதகத்த கேட்டா தெரியுமா?

ஹ...ஜாதகம் கேட்டாளா...என்னான்னு..?...மாமா உங்காத்து பொண்ணோட ஜாதகம் கிடைக்குமான்னா?

இப்படியே மெகா சிரியல் மாதிரி பேசிக்கிட்டிரு...இந்த தரம் அய்யா டிசம்பர்ல ஊருக்கு தனியா போறேன்...எமிரேட்ஸ்ல புக் பண்ணப் போறேன்...ஏர்ஹோஸ்டஸெல்லாம் சும்மா மைதா மாவு மாதிரி சூப்பரா இருப்பா..ஒருத்திய அப்படியே தள்ளிக்கிட்டு வந்திடறேன்...அக்கா அக்கான்னு உனக்கும் கூட மாட உதவியா இருப்பா...

சான்ஸே இல்லை இதெல்லாம் சும்மா உதார் தான்னு எனக்குத் தெரியும்

அது!!!!...இந்த...இந்த..பதிபக்தி, புருஷன் மேல அசைக்க முடியாத நம்பிக்கை..இதுல தான் என்னை அப்பிடியே கவுத்தறமா ..தீர்க்க சுமங்கலியா இரு...

யோவ் செவாலியே...கொஞ்சம் அடங்கறது...இது உங்கமேல உள்ள நம்பிக்கை இல்லை...மைதா மாவு மேல உள்ள நம்பிக்கை...அவங்களெல்லாம் உங்களை திரும்பி பார்த்து பேசி...வந்ந்ந்துட்டாலும்.. ஹூம்..ஏதோ விதி என் கண்ணை மறைச்சு...ஹ்ரிதிக்கோட போறாத நேரம்...இங்க வந்து குப்பை கொட்டறேன். நுள்ளிக்கிட்டு வறேன்...தள்ளிக்கிட்டு வறேன்னு...பார்த்து...அப்புறம் ப்ளைன்லேர்ந்து தள்ளி விட்டுற போறாங்க.


***
பி.கு: தலைப்பு --> பல்புகள் பலவிதம் :(