Wednesday, May 31, 2006

B.T

ஒரு வாரமாய் B.T-ல் படுத்தி எடுத்துவிட்டார்கள். நான் கீழ்ஸ்தாயில் "சாமஜ வரகமனா" பாடும் போது லேசாக வரும் கரகர சத்தம், எங்க ஊர் மாரியம்மன் கொடை விழாவில் போடும் ஸ்பீக்கரில் போட்ட மாதிரி ஒரு வாரமாக போனில் வந்து கொண்டிருந்தது. இன்கம்மிங் காலை எல்லாம் உத்தேசமாக இன்னார் பேசுகிறார் என்று அனுமானித்து மொபைலில் கால் பண்ணுங்கய்யா என்று சொல்ல வேண்டி இருந்தது. வழக்கமாக "இன்னொரு செல் போன் வாங்கிக்கோங்க" என்று கொஞ்சி கொஞ்சி பேசும் ஸ்பெயின் நாட்டுக் கிளி போன் பண்ணினாளா தெரியவில்லை கவலையாக இருக்கிறது.

B.T.க்கு போன் செய்து தகவல் சொன்னால், பழைய படங்களில் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே சொல்லும் டாக்டர் மாதிரி "எதாயிருந்தாலும் நாற்பத்தெட்டு மணி நேரம் கழிஞ்சாத் தான் சொல்லமுடியும்" என்று சொல்லி விட்டான். "அப்பாடா ஒருவழியாக ஒழிந்தது ப்ளாக் தொல்லை..இனிமேலாவது கொஞ்சம் குடும்பம், குழந்தை குட்டிகளை கவனியுங்கள்" என்று வீட்டில் ஏகப்பட்ட சந்தோஷம். வீட்டம்மா சொல்லிவிட்டர்களே என்று சிரமேற்கொண்டு குட்டிகளையெல்லாம் கவனிப்பது ஆகாது என்பதால் ஒருவாரமாக குழந்தை மட்டும் சமத்தாக கவனித்துக் கொண்டிருந்தேன்.

நாற்பத்தெட்டுமணி நேரம் கழிந்தும் ஒருத்தனையும் வருகிற வழியக் காணோம், போனில் வெறும் காத்து தான் வந்து கொண்டிருந்தது. கலர் டீவியை ப்ளாக் அண்ட் ஒயிட் டீவியாக மாற்றிய என்னுடைய மெக்கானிக் திறமையைப் பார்த்ததில் வீட்டில் ஸ்க்ரூட்ரைவரை ஒளித்து வைத்துவிட்டார்கள். "டேய் இன்னாங்கடா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க...அண்ணன் யாரு தெரியுமா...நாலு நாளா ப்ளாக் படிக்காம கைக் காலெல்லாம் இஸ்துகினு இருக்கு" என்று வீட்டில் காட்டமுடியாத கோபத்தையெல்லாம் சேர்த்து B.Tயை எகிறிய பிறகு தான் "தோ ஆள அனுப்பிட்டோம் ஆபீஸர்…வந்துகிட்டே இருக்காங்க..ஆபீஸர்" என்று வழிக்கு வந்தார்கள். ஒரு ப்ளாகரோடு கஷ்டம் இன்னொரு ப்ளாகருக்குத் தான் புரியும்ன்னு சும்மாவா சொன்னாங்க...பி.டியிலிருந்து அனுப்பிய மூதேவி “எங்கேயோ வேறு வேலை வந்து விட்டது நேரமாகிவிட்டது இனிமே நாளைக்குத் தான்" என்று கடையை மூடிவிட்டான். ஒருவழியாக நேற்று வந்து சரிசெய்து விட்டுபோயிருக்கிறார்கள்.

போன் வேலை செய்யாததால் எங்களால் குளிக்க முடியவில்லை..குதிரையைக் குளிப்பாட்ட முடியவில்லை சாப்பிட முடியவில்லை வீட்டோடு எல்லோரும் ஒரு வாரமாக பட்னி என்று பஞ்சப் பாட்டு பாடி நஷ்ட ஈடு கேட்டுக்கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் அகில உலக பளாகர் சங்கத்தில் சொல்லி மானநஷ்ட வழக்கு தொடரலாம் என்று இருக்கிறேன்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...ஒரு வாரமாய் காணாமல் போனதற்கு B.T. தான் காரணம்.

(தேன் கூடு போட்டியில் வழக்கம் போல் வோட்டுப் போட்டு கவுத்தி மங்களம் பாடி விட்டீர்கள். நன்றி ஹை. பதிவு போடாவிட்டால் சோம்பேறி என்றெல்லாம் வாழ்த்து மடல் பாடுகிறார்கள்...ஓட்டுப் போடச் சொன்னால் தான் சப்ஸ்கிருப்ஷன் பீஸ் கேட்ட மாதிரி காணாமல் போய்விடுகிறார்கள்..இவங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே முருகா....)

Wednesday, May 24, 2006

டைட்டானிக் - தமிழில்

டைட்டானிக்கை தமிழில் எடுப்பதற்கு பதிலாக தமிழ்ப்படுத்தி எடுத்தால் எப்படி இருக்கும் என்று திறமையாக சிந்தித்து உல்டா செய்திருக்கிறார்கள். சரி காமெடியாக இருக்கிறது. மொத்தம் பதிமூன்று நிமிடங்கள். மிஸ் செய்யக் கூடாத படம் :)
எச்சி துப்பும் போட்டியை நக்கல் விட்டிருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்...விட்டுவிட்டார்கள்.

இந்த படத்தின் படைப்பாளி/கள் யார் என்று தெரியவில்லை....மனமார்ந்த பாராட்டுக்கள்!! நல்ல் எதிர்காலம் இருக்கிறது உங்களுக்கு...கொஞ்சம் முயற்சி செய்யுங்கள், தமிழ் திரையுலகத்தில் நீங்கள் ஜொலிக்கலாம்.

Monday, May 22, 2006

ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்...














ஹப்பா....பார்ட்டி மிக நன்றாக கழிந்த்து. இந்தப் பார்ட்டியின் ஹைலைட்டே என்னைப் பொறுத்தவரையில் சாப்பாடு தான். அல்வா, சப்பாத்தி, குருமா,தால், சாம்பார், ரசம், கோவைக்காய் கறி, அவியல், எண்ணைக் கத்தரிக்காய் குழம்பு, அப்பளம், ஊறுகாய், பச்சை மிளாகாய் கறிவேப்பிலை பெருங்காயம் போட்டு தரமான மோர். திருநெல்வேலிக் காரன் என்ற முறையில் அல்வா எப்படியிருக்குமோ என்று கவலையாய் இருந்தது. தூள் கிளப்பியிருந்தார்கள்.

இனிமேல் பார்ட்டி நடத்த வேண்டுமானால் எந்த பொறுப்பை முக்கியமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நன்றாகத் தெரிந்துவிட்டது. இந்த முறை பைசாவை சேமிக்க வேண்டும் என்று சாப்பாட்டை எனது காரிலேயே பிக்கப் செய்து கொண்டு வருவதாக ஏற்பாடு. வீட்டில் இருக்கும் அரை டிக்கட், கால்ரைக்கா டிக்கட் மற்றும் முக்கியமான டிக்கடோடு எக்ஸ்ட்ரா டிக்கெட்டாக நண்பர் பழனியப்பன் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு சப்பாட்டையெல்லாம் கார் பூட்டிலும்(டிக்கி) பழனியப்பன் மடியிலும் போட்டு கிளம்பினால் மோட்டர்வேயில் ட்ராபிக் ஜாம். ம்ஹூம்...கவலையே படலையே...பார்ட்டி மதியம் ஆரம்பிப்பதால் முதலில் சாப்பாடு தான். சாப்பாடு இங்கே இருப்பதால் நாம் போனால் தான் பார்ட்டி ஆரம்பிப்பார்கள் என்று தெளிவாகத் தெரிந்ததால் நிதானமாக "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" பாட்டு பாடிக்கொண்டு போனோம். ரொம்ப முடியாவிட்டால் "நாங்கள் பார்ட்டி இடத்தை மாற்றி விட்டோம் நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள் என்று சொல்லக் கூடிய தைரியமும் கார் பூட்டில்(டிக்கியில்) இருந்தது. நல்லவேளை பழனியப்பன் கேட்ட மாதிரி வடை பெட்டியை அவர் கையில் குடுக்காததால் வடைக்கு எந்த சேதமுமில்லாமல் 15 நிமிஷம் லேட்டாக முதல் பத்து பேருக்குள் வந்து சேர்ந்துவிட்டோம்.

ஒருவழியாக எல்லோரும் வந்து சேர்ந்து சாப்பாடு முடிந்து 12 மணிக்கு ஆரம்பிக்கவேண்டிய பார்ட்டியை இந்திய வழக்கப் படி கரெக்ட்டாக 2:30க்கு ஆரம்பித்துவிட்டோம். முதலில் ஸ்லோகம் என்று எல்லோரையும் எழுந்து நிற்கச் சொல்லி எல்லோரும் பக்திப் பழமாக..ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க "வாள மீனுக்கும் வெலாங்கு மீனுக்கும் கல்யாணம் " என்று கானா உலகநாதனின் ஸ்லோகததைப் போட்டுக் கலாச...என்னை ஆள் வைத்து அடிக்க சதி தீட்ட ஆரம்பித்து விட்டார்கள். அப்புறம் உணமையான ஸ்லோகம் பாடச் சொல்லி வழக்கமான விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்தோம். உற்சாகம் வழக்கம் போல் கரைபுரண்டு ஓடியது. மிஸ்டர் யு.கே.மக்கள் போட்டியில் நம்ம பாலாஜி வெற்றி பெற்றார். கிரீடத்தை வைத்துக் கொண்டு மனுஷன் செய்த ஆண்கள் மற்றும் பெண்கள் கேட்வாக் கலாசல் ரகம். கடைசியில் நாலுகாலில் ஒரிஜினல் கேட் மாதிரி நடந்து அவர் வீட்டம்மணியைப் பார்த்து ஒரு சலாம் போட்டார் பாருங்கள் காணக் கண் கோடி வேண்டும்.

சிறுவர் சிறுமியர்கள் மேடைகளில் தத்தம் திறமையைக் காட்ட, சில குழந்தைகள் மைக்கைப் பார்த்ததும் பயந்து அம்மா புடவைக்குள் போய் ஒளிந்து கொண்டது...கவித்துவமாக கொள்ளை அழகாகயிருந்தது.

பாட்டுக்குப் பாட்டு, மற்றும் பாட்டு க்விஸ்களுக்கு நடத்திக் கொண்டிருக்கும் போதே மணி ஐந்தாகிவிட திரும்பவும் பசியாற சென்றோம். சமையல் போட்டியில் வடை, குலாப் ஜாமூன், முறுக்கு, சுகியம், தட்டை, வீட்டில் செய்த பிஸ்கெட்டுகள், ஓலை பக்கோடா, சிக்கன் பக்கோடா, ராஜ்மா சுண்டல், மசாலா அவல் என்று கலக்கி விட்டார்கள். "சோறே சொர்கம்" என்று எனக்கு ஞானம் பிறந்தது இந்தப் பார்ட்டியில் தான். எங்கவூட்டு அம்மணி செய்த குலோப் ஜாமூன் அதிக வாக்குகளைப் பெற்று வென்றது என்பதை நான் இங்கு எழுதாவிட்டால் என்ன நடக்கும் என்பது கல்யாணமான ஆண்களுக்குத் தெரியும்.

திரும்ப வந்து "டம்ப் சேரட்ஸ்" மற்ற்ம் "ஹவுஸி" போட்டிகளை நடத்தி பார்ட்டியை இனிதே நிறைவு செய்தோம். நேரமின்மை மற்றும் டெக்னிகல் பிரச்சனைகளால் குத்தாட்டத்தை ரொம்ப விமரிசையாக நடத்த முடியவில்லை ஆனாலும் மக்கள் குத்தில் செம கிளப்பு கிளப்பிவிட்டார்கள். போட்டியில்லாத இடத்தில் திறமையைக் காட்டக் கூடாதென்று என்னுடைய சலங்கை ஒலி ஆட்டத்தை அடுத்த பார்டிக்கு இருக்கட்டும் என்று ஒத்தி வைத்துவிட்டேன். விழா ஏற்பாடுகளை பிரேமலதா பாலன் தம்பதியினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

பிரேமலதா, அம்மணி, மும்பை கேர்ல், பாலாஜி, தாதோஜி,எஸ்.எல்.என் என்று ப்ளாக் உலக கூட்டமும் வந்திருந்தது. அம்மணியிடமிருந்து கூடிய சீக்கிரம் ஒரு Quick Tale வந்தாலும் வரலாம் :)

யூ.கே.மக்கள் குழுமத்தில் அடுத்த முறை எங்காவது வெளியூருக்கு போய் கேம்ப் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். வர்றீங்களா?


பின்குறிப்பு - தேன்கூட்டில் "தேர்தல் 2060"க்கு வாக்குப் பதிவு ஆரம்பித்துவிட்டார்கள். படித்துப் பார்த்து உங்களுக்குப் பிடித்த ஆக்கத்திற்கு வோட்டக் குத்தி கவுத்துங்கப்பூ

Thursday, May 18, 2006

பேஷன்

பேஷன் என்றால் வெத்தலப் பாக்கு வைத்துக் கொடுக்கும் தட்டு என்று தான் சின்னவயதில் ரொம்ப நாள் வரை எனக்குத் தெரியும். நண்பன் ஒருவனுக்கு மெட்ராஸ் வரை உறவு. ஐந்தாவது படிக்கும் போதோ என்னமோ...ஒரு நாள் காலரை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு வந்தான். கேட்டதற்கு "இதான் இப்போ மெட்ராஸில் பேஷன்" என்று சொன்னபோது தான் வெத்தலப் பாக்குக்கு அப்பாற்பட்ட ஒரு சமாச்சாரம் இருக்கிறது என்று தெரியவந்தது. "ஆமாமா எங்க சித்தப்பா பையனும் அப்படித் தான் சொன்னான்" என்று இல்லாத சித்தப்பாவை மேற்கோள் காட்டி விட்டு அந்த நண்பனையே என்னுடைய பேஷன் குருவாக ஏற்றுக்கொண்டேன்.

ஆனால் வீட்டில் பேஷன் ஞானம் ரொம்பக் கம்மி. பள்ளி யூனிபார்மிலிருந்து விசேஷங்களுக்கு வாங்கும் கலர் துணி வரை எல்லாவற்றிலும் மிடில் க்ளாஸ் பேஷன் தான் தலையோங்கித் தழைக்கும். ஒட்டடைக் குச்சி மாதிரி இருந்தாலும் வளர்ற பையன் என்ற பட்டம் துணி தைக்க டெய்லர் கடைக்குப் போகும் போது கண்டிப்பாக கிடைக்கும். "வளர்ற பையன்..டிராயர் ரெண்டு ஹெம்மிங் உள்ளே மடிச்சுத் தைச்சு..நல்ல பெரிசாத் தைச்சிடு மணி...தைக்கிறதெல்லாம் சீக்கிரமே சின்னதாய் போயிடறது"- மாமா சங்கு ஊதாமல் டெய்லர் மணி அளவு எடுக்கவே முடியாது. மணிக்கு ஏற்கனவே தாராள மனசு..மாமாவின் கோரிக்கையும் சேர்ந்து பாவடைக்கு கொஞ்சம் நீளம் கம்மியாக டிராயரைத் தைத்துவிடுவார். குலேபகாவல்லி எம்.ஜியார் மாதிரி ரொம்பவே தாராளமாக இருக்கும். அளவு எடுக்கும் போது "ப்ளீஸ் டைட்டாக தையுங்க" என்று மாமாக்கு தெரியாமல் என்ன தான் கெஞ்சினாலும் மணி கண்டுகொள்ளவே மாட்டார். டைட்டாக தைத்தால் தானே சீக்கிரம் சின்னதாகப் போகும் அடுத்த துணி தைக்க வருவார்கள் என்று மணிக்குப் பொழைக்கவே தெரியாது. மணி காட்டும் கைவண்ணத்தில் தயிர்வடை தேசிகன் மாதிரி இருக்கும் என் பெர்சனாலிட்டி ஓமக் குச்சி நரசிம்மனுக்கு அப்கிரேட் ஆகிவிடும். ஊரில் ஒரு குசும்பு பிடித்த மாமி "டேய் உன் டிராயரக் கொஞ்சம் தாயேன் எங்காத்து நிம்மிக்கு பாவாடை தைக்க டெய்லர் அளவு துணி கேக்கறான்" என்று ரவுசு விடும்போதெல்லாம்...மணி சீகிரம் கடையை மூட வேண்டும் என்று மனதில் கோபம் வரும். அந்த மாதிரி டவுசரெல்லாம் காலத்தாலும் அழியாது என்பதால் வேண்டுமென்றே சிமிண்ட் தரையில் பிட்டியைத் தேய்த்துக் கிழித்து விடுவேன். "மீட்டர் அறுபது ரூபாய் குடுத்து விமல் சூட்டிங்ஸ்ல எடுத்தால் அடியில அருவாமனை வைச்சுண்டிருக்கிற மாதிரி எப்பிடித் தான் கிழிக்கிறயோ..." என்று மாமி அய்யோப் பாவமாய் புலம்புவார்.

துணி தைக்க மாமா வரமுடியாமல் மாமி அளவு கொடுக்க கூட வந்தால் கொஞ்சம் தப்பிக்கலாம். மாமி ரொம்ப அப்பிராணி. மணிக்கு ஒரு அஸிஸ்டென்ட் உண்டு. இளைஞன். அவனிடம் தான் கடையில் இருக்கும் புஸ்தகத்திலுள்ள மீசையில்லா ஹிந்திப் பட மைனர்களைக் காட்டி சிலாகித்துக் கொண்டிருப்பேன். ஒரு தரம் அவனோடு பார்ட்னர்ஷிப் போட்டுக் காட்டிய டகால்டி வேலையில் தீபாவளிப் பேண்ட் சீக்கிரமே சின்னதாகப் போய்விட்டது. அன்றைக்கு என் புண்ணியத்தில் மணிக்கு வீட்டில் ஸ்பெஷல் அர்சனை டிக்கட்.

தொளதொளவென்று தைக்காமல் டைட்டாக இருக்கும் டைட்ஸ் கொஞ்ச நாள் தான் இருந்தது. அப்புறம் என் பேஷன் குரு "இப்போ லேட்டஸ்ட் பேஷன் பேகி பேண்ட் தான்" என்று மெட்ராஸ் பேஷனை இறக்குமதி செய்துவிட்டான். அதுவரை டைட்டாகத் தைக்கச் சொல்லி கழுத்தறுத்த மணியிடம் லூஸாகத் தைக்கச் சொல்லி பல்லவியை மாற்றியதில் மணி தான் கொஞ்சம் லூஸாகி விட்டார். பேகியில் பாக்கெட் பக்கத்தில் எத்தனை ப்ளீட்ஸ் இருக்கு என்பது மிக முக்கியம். பையன்கள் அதைத் தான் முதலில் பார்ப்பார்கள். "பொம்பளங்க புடவை கட்டுற மாதிரி...இதெல்லாம் எதுக்குப்பா" என்று மணி ரொம்பவே புலம்புவார். ஏழு ப்ளீட்ஸும் பயங்கர லூஸாக பேகியும் போட்டுக்கொண்டு கண்ணாடியில் ஸ்டைலாகப் பார்த்துக் கொண்டு தெருவில் நடந்தால் "ஸூலேர்ந்து தப்பிச்சு வந்த தேவாங்கு மாதிரி இருக்கு...இருக்கிற உடம்புக்கு இது ஒன்னு தான் குறைச்சல்...பார்த்துடா கூண்டுல பிடிச்சிண்டு போயிடப் போறான்" - ஏகப்பட்ட திருஷ்டி கழியும்.

அப்புறம் அஞ்சலி படத்தில் அந்தப் பையன்கள் எல்லோரும் சஸ்பென்டர் பெல்ட் வைத்து போட்டு வந்த ட்ரெஸ் ரொம்ப பிரபலமாயிற்று. மணியிடம் அதை விளக்குவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. மணியிடம் ஒரு குணாதிசயம் உண்டு. விஷயம் தெரியவில்லை என்று மட்டும் சொல்லவே மாட்டார். என்னை மாமா முன்னாடி எப்படி மடக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். "இந்த சஸ்பென்டர் கிஸ்பென்டர் இதெல்லாம் மூக்கு ஒழுகிற சின்னப் பசங்க டவுசர் அவுந்திரக் கூடாதுன்னு ஒரு பெல்ட பொட்டு வைச்சு தைக்கிறது...வளர்ந்த புள்ளங்க உங்களுக்கு எதுக்குப்பா...சரி எனக்கென்ன...ஆனா அதுக்கு இருபது ரூபாய் கூட ஆகும்.." என்று கரெக்டாக கத்தரி போட்டுவிடுவார். அதைக் கேட்ட மாத்திரத்தில் மாமாக்கு சஸ்பென்டர் பிடிக்காமல் போய்விடும். "அதான் இடுப்புக்கு ஜோரா பெல்ட் வாங்கிக் குடுத்திருக்கிறேனே இப்போ அதப் போட்டுக்கோ போறும் ...இதெல்லாம் அடுத்த தரம் பார்த்துக்கலாம்" என்று ஒரே போடாக போட்டுவிடுவார். "நாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு" என்று எனக்கு கத்தவேண்டும் போல இருக்கும்.."சரி மாமா" என்று தலையாட்டிவிட்டு அடுத்த தரம் வருவதற்குள் சஸ்பென்டர் பேஷன் மாறி இருக்கும்.

ஜீன்ஸ் வந்த போது அது வித்த விலைக்கு வீட்டில் சமாளிப்பது பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது. "சாயம் போன சாக்குத் துணிய இவ்வளவு விலை குடுத்து எவனாவது வாங்குவானா?" என்று ரொம்ப நாளாக கிடைக்கவேஇல்லை. ஊரிலிருந்து வரும் போது யாராவது வாங்கிக் கொடுத்தால் தான் உண்டு. எனக்கு பிடித்த பேஷன் மாறுதல்களிலேயே ஜீன்ஸுக்குத் தான் முதலிடம். அடிக்கடி தோய்க்க வேண்டாம், சீகிரம் அழுக்காகாது, ஆனாலும் தெரியாது, எந்த சட்டையோடு வேண்டுமானலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் எலி செத்த வாடை வந்தாலே எங்கள் வீட்டில் என் ஜீன்ஸை தோய்க்கப் போட்டுவிடுவார்கள். ஆனால் இந்தக் கிழித்து விட்டுக் கொண்ட ஜீன்ஸெல்லாம் பிடிக்காது.

ஜீன்ஸ், ரெடிமேட் என்று வந்த பிறகு கொஞ்சம் தைரியமாகி அப்புறம் மணி கடைக்குப் போவதை நிறுத்தி விட்டேன்.

சின்ன வயதில் பேஷன் பேஷன் என்று அவ்வளவு அலைந்ததற்கு..இப்பொழுது அவ்வளவு நாட்டமில்லை. "உங்களுக்கு பேஷன் சென்ஸ் சுத்தமா இல்லை" என்று தலமைச் செயலகம் சொல்லி துணியெடுக்கப் புறப்படும் போதெல்லாம்..."யாரு எனக்கா...ஹ... மணி கடையில கேட்டுப் பாரு நம்ம பேஷன் சென்ஸ" என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

Tuesday, May 16, 2006

தேர்தல் 2060 - சிறுகதை

தேன்கூடு நடத்தும் போட்டிக்கு எனது ஆக்கம். இந்தக் கதையில் உங்களுக்கு சுஜாதாவின் தாக்கம் தெரியுமானால் அது என் தவறில்லை. இந்த மாதிரி கதைகளில் அவ்வளவு பெரிய பாதிப்பை உண்டு பண்ணியிருக்கிறார் மனுஷன். முற்றிலும் மாறுபட்ட களத்தில் இன்னொரு கதையையும் யோசித்தேன். கடைசியில் இதே இருகட்டும் என்று இதை முதலில் எழுதிவிட்டேன். அதக் கதையையும் முடிந்தால் இங்கே பதிகிறேன்.
********************
தேர்தல் 2060

"இவர் தான் பிஜு, ‘அவிஷ்கா’ மாட்யூலின் சீஃப் டெக்னிகல் ஆர்கிடெக்ட்" நிர்வாக இயக்குனர் என்னை வீடியோ கான்பரன்ஸில் அறிமுகப் படுத்திய போது ஒரு அழுத்தமான அமைதி அங்கு நிலவிக்கொண்டிருந்தது. டெக்னிகல் டைரக்டர் உட்பட எல்லா பெரிய தலைகளும் ஆஜராகியிருந்தார்கள்.

"பிஜுவிற்கு ‘அவிஷ்கா’ மாட்யுலில் தெரியாத விஷயமே கிடையாது நூற்றி அறுபது பேர் கொண்ட டீமின் மொத்த மூளையும் பிஜு தான்" - டைரக்டர் அளவுக்கு அதிகமாக என்னைப் புகழ்ந்து கொண்டிருந்தார்.

நடக்கும் 2060-ம் வருஷ தேர்தலின் மூளை, முதுகெலும்பு, நரம்பு, கிட்னி எல்லாமே இந்த “அவிஷ்கா” மாட்யூல் தான். வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் விபரங்கள், வாக்கு சேகரிக்கும் முறை, தேர்தலை நடத்துவது என்று சகலத்தையும் அடக்கி வைத்திருக்கிறது. கள்ள வோட்டு என்பதை சரித்திர கால தொடராக்கிய விஞ்ஞான வஸ்து. கி.பி.2010 வரை புழங்கிக் கொண்டிருந்த வாக்காளர் அட்டை, வாக்குச்சாவடி என்று சாவடிக்காமல் 2060ன் விஞ்ஞான வளர்ச்சியின் அததாட்சி. நேனோ சேனலில் ஒளிபரப்பாகும் "கோலங்கள்" தொடரில் சிபியும் அவ பாட்டி அபியும் டயலாக் பேசி முடிப்பதற்குள் மொத்த தேர்தலையும் நடத்தி முடித்துவிடும். இந்த முறை தேர்தலை நடத்த எங்கள் ‘அவிஷ்கா’ மாட்யூலை எலெக்க்ஷன் கமிஷன் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த தேர்தல் ஓத்திகைகளுக்காகத் தான் ராப்பகலாக என் டீம் உழைத்துக் கொண்டு இருக்கிறது.

தேர்தல் நடத்தப் போகும் முறை பற்றி போட்டியிடும் கட்சி தலைவர்களுக்கு நிர்வாக இயக்குனர் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாக் கட்சித் தலைவர்களும் லாகின் செய்திருந்தார்கள். ஒருத்தருக்காவது இந்த டெக்னாலஜி விஷயங்கள் பிடிபடுமா என்று எனக்கு ரொம்ப சந்தேகமாக இருந்தது. இந்த மாதிரி மீட்டிங்குகளில் நான் பொதுவாக கலந்துகொள்ளமாட்டேன். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று என்னுடைய மாட்யூல் என்பதால் ஒருவேளை எதாவது டெக்னிகல் கேள்விகள் வந்தால் விளக்கம் கூற வர வேண்டிய நிர்பந்தம்.

கட்சி தலைவர்கள் அறிமுகப் படுத்திக் கொண்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். நான் கூட்டத்தை நோட்டம் விட ஆரம்பித்தேன். முப்பதிரண்டாம் திரையில் தெரிந்த நபரை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அவன் பக்கதில் உட்கார்ந்திருந்த பெண் நான் பார்ப்பதைப் பார்த்து நட்புடன் சிரித்தாள். அவளைத் தொடர்ந்து அவனும் புன்முறுவல் பூத்தான். கண்டிப்பாய் அவனை எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று தான் பிடிபடவில்லை. எங்கு பார்திருக்கிறேன் என்று புருவத்தை நெருக்கி யோசித்துக் கொண்டிருந்ததில் டிஜிட்டல் முன்னேற்றக் கழகத் தலைவர் கேட்ட அபத்தமான கேள்வியைக் கோட்டை விட்டு அப்புறம் சமாளித்து பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

"என்னைத் தெரிகிறதா?" - திடீரென்று என் திரையில் ப்ரைவேட் மெசேஜ் பளிச்சிட்டது. அவனிடமிருந்து தான். யோசிப்பது மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டே இல்லை என்று தலையை ஆட்டிக் காட்டினேன். எதிர்பார்த்தவன் போல்...சகஜமாக நோட்டம் விட்டுக் கொண்டே மெதுவாக ஆப்டிகல் மார்க்கரை மூக்குக்கு கீழே மீசை மாதிரி வைத்துக் காட்டினான்.

இப்போது பிடிபட்டு விட்டது...மிஸ்ரா...என்னுடைய யுனிவர்ஸிட்டியில் இரண்டு ஆண்டுகள் சீனியர். யூனிவர்சிட்டி முழுவதும் அவனுடைய அறிவு பிரபலம். ஏதோ பெரிய கம்பெனியில் வெளிகிரகத்தில் செட்டிலாகி மார்ஸுக்கும், ப்ளூட்டோவிற்கும் பறந்துகொண்டிருப்பான் என்று நினைதவன்...நியூட்ரான் சமாஜ் கட்சித் தலைவனா? என்னால் நம்பவே முடியவில்லை. "என்ன இப்படி.." என்று மெசேஜ் அடித்தே விட்டேன்.

"இப்போ அரசியல் ஒரே ஊழலாகிவிட்டது படித்தவர்கள் களம் இறங்கினால் தான் களையெடுக்க முடியும்" ரொம்பத் தீவிரமாக பதில் அனுப்பியிருந்தான்.

எனக்கும் ரொம்ப அவசியம் என்று தான் பட்டது. அவ்வளவு ஊழல் மண்டிப் போயிருந்தது. சந்திரன், நவீன் எல்லோரும் அவனுடன் கட்சியில் இருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். பக்கத்திலிருந்தது அவன் செட் காவ்யா மாதிரி இருந்தது. கேட்கவில்லை. அவள் பின்னாடி ஒரு பெரிய கூட்டமே யுனிவர்ஸிட்டியில் அலைந்து கொண்டிருக்கும்.

மீட்டிங் முடிந்து பேசலாம் என்று கவனிப்பது போல் தீவிரமாகிவிட்டேன். காவ்யா அவன் பக்கதிலிருந்த அன்யோன்யத்தைப் பார்த்தால் காதலிக்கிறார்கள் என்றே தோன்றியது. கை கோர்த்து உட்கார்ந்திருக்கிறார்களா என்று திரையில் தெரியவில்லை.

மீட்டிங் முடிந்து மிஸ்ராவுடன் "சேட்"டிக் கொண்டிருந்த போது அது காவ்யா தான் என்று ஊர்ஜிதமாயிற்று.

"பிஜூ நீ படித்த துறையிலேயே பெரிய வேலையில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் டெக்னாலஜி பக்கம் திரும்பி வெகுநாட்களாகிவிட்டது " - மிஸ்ராவின் ஆதங்கம் எனக்குப் புரிந்தது. அவனும் நான் படித்த துறையில் கில்லாடி தான். அதற்கப்புறம் கொஞ்ச நேரம் டெக்னிக்கலாக உரையாடிக் கொண்டிருந்தோம். நான் மிக புத்திசாலித்தனமாக ‘அவிஷ்கா’-வை வடிவமைதிருப்பதாக மிஸ்ரா புளகாங்கிதமடைந்தான். இந்த மாதிரி டெக்னிகல் விஷயங்களைப் பேசுவதற்காகவாது நாம் இனிமேல் அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டான். நேரமாகிவிட்டது அப்புறம் சந்திக்கலாம் என்று பரஸ்பரம் விடைபெற்றுக் கொண்ட போது தான் அதைக் கேட்டான்

" தப்பாக எடுத்துக் கொள்ளாதே...பிஜூ...ஈசி784பியில் ஒரு சின்ன சித்து விளையாட்டு காட்டினால் விழும் ஓட்டுகளில் ஓவ்வொரு நாலாவது வோட்டும் எங்கள் கட்சிக்கு விழுமாறு செய்யமுடியும்...கடைசி வோட்டில் அந்த ட்ரோஜனை தானே அழிந்து போகும் படியும் செய்யலாம்..எந்தத் தடயமும் இருக்காது...எனக்காக, நம் யுனிவர்சிட்டியில் படித்த இளைஞர் பட்டாளத்திற்காக இதைச் செய்யமுடியுமா? நான் மட்டும் வந்துவிட்டால் உன்னை இந்த கம்பெனியின் இயக்குனாரக ஆக்கவேண்டியது என் பொறுப்பு.. என்ன சொல்ற"

எனக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

இனி ஒரு விதி செய்வோம்!

லோக் பரித்ரன் கட்சி உடைந்தது.


“We left Lok Paritran on Sunday in disgust after witnessing the favouritism shown to the Mylapore candidate Santhanagopalan, who was given all the financial support and workforce for the campaign. We got nothing by way of support. On the other hand, we were abused, humiliated and even threatened by our national leadership,” said K. Rajamany, the Anna Nagar candidate and an engineering consultant.


இனி ஒரு விதி செய்வோம்!
"அரசியல் என்பது சாக்கடை என்ற சித்தாந்தம் அடிமனதில் ஊன்றியிருக்கிறது. "ஆயுத எழுத்து" பார்த்து மணிரத்தினத்தை நினைத்து புன்முறுவலுடன் உதட்டைப் பிதுக்கி இருக்கிறேன். பெட்டிகளும், சீட்டுகளும் தீர்மாணிக்கும் கொள்கைகளுக்கும், கடைசி நேர தேர்தல் நேர கூட்டணிகளுக்கும் வரிசையில் நின்று ஓட்டுப் போடுவைதை விட பால்கோவா சாப்பிட்டுவிட்டு பல்லைக் குத்திக் கொண்டிருக்கலாம் என்று ஒரு தரம் கூட வோட்டுப் போடாமல் இருந்திருக்கிறேன். ஏதோ.ஒரு.மு.க ஆட்சிக்கு வரும் போது "கிழிச்சுருப் போறாங்க" என்பதை பெருசுகள் பேசட்டும் என்று புறந்தள்ளியிருக்கிறேன்."அப்துல் கலாம்" ஜனாதிபதியானாலும் அடுத்தது யார் என்ற நெருடல் இருந்திருக்கிறது. வோட்டு போட்டவில்லை என்பது பெரிய குற்றவுணர்ச்சியாக இல்லாமல் இருந்திருக்கிறது"

அட போங்கப்பா....அப்பிடியே இருந்துட்டு போறேன்...!!!

Friday, May 12, 2006

Hemel Pary Curtain Raiser

உங்கள விட்டா எனக்கு வேற யாரு இருக்காங்க..நீங்களே காறித் துப்பலைன்னா வேற யாரு துப்புவாங்க...

ராத்திரி கண்ணு முழிச்சு ஏதோ செஞ்சிருக்கேன்....கொஞ்சம் பார்த்து பெரிய மனசு பண்ணுங்கண்ணா /பண்ணுங்கக்கா

****
Hi All,
A curtain raiser presentation is now available now. Don't miss this presentation with Audio.

Follow the instructions below to see and enjoy it.

Download the zip file. Extract the contents to root c:\ (The presentation will not work if you extract to any other location i.e. the mp3 file needs to be in c:\ else audio will be lost ).


Click here to download the presentation
(if the link does not work then cut and paste http://www.dubukkuworld.com/Hemel/HemelCurtainRaiser.zip in Internet explorer).

Turn your speakers on and Double click Hemel_Invitation.pps.

Sit back and enjoy(?!!??!) the presentation with audio .
*********

Wednesday, May 10, 2006

"தண்ணி" பார்ட்டி

உலகில் என்னை மாதிரி தண்ணியடிக்காத தறுதலைகளுக்கெல்லாம் கஷ்டமான காரியங்களில் ஒன்று தண்ணிப் பார்டிக்குப் போவது. இதில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால் இன்னும் விசேஷம். தீர்த்தம் சாப்பிடும் மஹானுபாவர்களின் குஷியை இந்த மாதிரி பார்ட்டிக்குப் போகும் போது பார்க்கவேண்டுமே. சும்மா தேமேன்னு இருந்தாலும் விடமாட்டார்கள். "சும்மா வாடா, அங்க அவனவன் வாயில ஃபனல வச்சு ஊத்திக்கிறத பாரு கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்" என்று சும்மா இருக்க விடமாட்டான். முதலில் ரெண்டு மூனு தரம் இப்படி ஏமாந்து போயிருக்கிறேன். வாயில் ஃபனலை வைத்து கொண்டு ஊத்திக் கொள்வதெல்லாம் உண்மை தான். ஆனால் அன்ட்ராயர் அவிழ்ந்தது கூடத் தெரியாமல் ஊத்திக் கொள்ளுவதெல்லாம் எனக்கு என்னமோ கண்கொள்ளாக் காட்சியாகப் படவில்லை. ஒழுங்காய் பேசிக் கொண்டிருப்பவர்களெல்லாம் ரெண்டு ரவுண்டு உள்ளே போனவுடன் கார்ல் மார்க்ஸாகி விடுவார்கள். வாழ்க்கை என்றால் என்ன, இன்பம் என்றால் என்ன துன்பம் என்றால் என்ன என்று தத்துவங்கள் எடுத்து விடுவார்கள் பாருங்கள்...காதில் ரத்தம் வந்துவிடும். சிலர் வள்ளலார் மாதிரி கருணைக் கடலாகி விடுவார்கள். உலகில் ஏழைகளே இருக்கக் கூடாதுடா என்று ஆரம்பித்து கருணை உணர்ச்சி பொங்கும். ஒரு நண்பன் தண்ணியடித்துவிட்டு சிக்கனை மென்று கொண்டே எறும்புகள் வாழ்கையில் எப்பிடி கஷ்டப்படுகின்றன, மழை பெய்தால் எவ்வளவு கஷ்டம் அதற்கு உடம்பு சரியில்லாமல் போனாலும் யார் உதவுவார்கள் என்றெல்லாம் ஃபீல் பண்ணி குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறான். நமக்கு சிரிப்பு வந்தாலும் சிரிக்க முடியாது. மற்ற தண்ணியடித்த தொண்டரடிப் பொடியாழ்வார்கள் கோவித்துக் கொண்டுவிடுவார்கள். அதற்கப்புறம் அடுத்த நாள் இதைப் பற்றி சொல்லிச் சொல்லி நான் ஓட்டின ஓட்டில் அவன் ஓடியே போய்விட்டான்.

கூட்டமாய் போனாலும் பரவாயில்லை. தண்ணியடிக்கும் நண்பனுக்கு கம்பெனி குடுக்க தனியாய் போய் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான். அதிலும் லவுஸ் விடும் நண்பனாய் இருந்தால் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. விட்டத்தைப் பார்த்துக் கொண்டு சிகிரெட் புகையை ஊதிக்கொண்டு "அன்னிக்கு அவ என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு" என்று ஃபீலிங் காட்டுவார்கள் பாருங்கள், சினிமாவில் ஒரு தாடி வைத்த தாத்தா கம்பளி போர்வையை போர்ர்திக் கொண்டு பின்னால் புகை வர கைய்யில் ஒரு வட்டமான கொட்டைத் தட்டிக் கொண்டு ஒருத்தருமே இல்லாத ஊரில் தெருத் தெருவாக ஒரு நாயைக் கூட்டிக் கொண்டு போய் யாருக்காகவோ பாடுவாரே அதெல்லாம் தோத்துவிடும். பீலிங் படலத்திற்கு பிறகு வாயிலெடுத்து வழித்துக் கொட்டும் வைபவமும் இருக்கும். என்னைப் பொறுத்த வரை தண்ணியடிப்பவர்களுக்கு கோபம், தாபம், பாசம்,சுயமரியாதை, உலக அக்கறை என்று எல்லா உணர்ச்சிகளுமே மேலோங்கி இருக்கும். சொந்தக்கார வட்டத்தில் இரண்டு பேர் தண்ணியடித்து விட்டு ராத்திரி டி.வி.யெஸ் 50ல் வந்துகொண்டிருக்க, ஒரு (உண்மையான) கழுதை குறுக்கே ஓடி வந்து வண்டியிலிருந்து விழுந்துவிட்டார்கள். ஒரு நண்பனுக்கு கொஞ்சம் அடிபட்டு முட்டியில் ரத்தம் வந்து விட்டது. அதைப் பார்த்த இன்னொரு நண்பனுக்கு கோபம் தலைக்கேறி பழிவாங்கும் உணர்ச்சி மேலோங்க கழுதையை அடிக்க ரோடு முழுக்க துரத்திய கதை இன்னமும் குடும்பத்தில் பிரசித்தம். " அது எதுக்குடா கழுதைய அந்த துரத்து துரத்தின" என்று ஒவ்வொரு தரமும் என் வீட்டுக்காரி என்முன்னால் அவர் மானத்தை வாங்குவார்.சில கேஸ்கள் நேர் உல்டா. ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் வாயே திறக்க மாட்டார்கள். கடப்பாறையை போட்டு நிமிண்டினால் தான் ஒரு வார்த்தை சாஸ்திரத்துக்குப் பேசுவார்கள்.

ஒருதரம் சென்னையில் ராம்கோவில் சிஸ்டம்ஸில் இருந்த போது நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தைக் காரணம் காட்டி அவருக்கு மொட்டை போட நண்பர் குழாம் முடிவு செய்தது. வழக்கமாக அடையாறில் வெட்டுகிற இடங்களை எல்லாம் விட்டு விட்டு தரமணி டாக்கீஸ் என்று தண்ணியடிக்கும் தர்மவான்கள் முடிவு செய்தார்கள். அங்கே தண்ணியும் உண்டு நல்ல சப்பாடும் உண்டு என்று சதிவலை பின்னப்பட்டதில், நானும் இன்னொரு அப்பாவியும், சாப்பாடு கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு போனோம். தியேட்டர் மாதிரி திரையெல்லாம் வைத்து நல்ல ஜோராகத் தான் இருந்தது. "என்ன வேண்டும்" என்று கேட்டு பேரர் விருந்தோம்பாமல் பாருக்குப் போனால் தான் சைட் டிஷ் இலவசம் இங்கே தீர்த்தம் சப்பிட்டால் சைட் டிஷ்க்கும் படியளக்கவேண்டும் என்று சொல்ல, கும்பல் பாருக்கு குடிபெயர்ந்தது. ஜூஸெல்லாம் குடித்தால் சாப்பிட சாப்பாடு அளவு குறைந்துவிடும் என்று நான் ஜூஸை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏழு மணிக்கு ஆரம்பித்த பார்ட்டி, பத்து மணி வரை தண்ணியிலேயே மிதந்து கொண்டிருந்தது. நானும் அந்த அப்பாவியும் வந்து கொண்டிருந்த சுண்டலை மட்டும் நொசுக்கிக் கொண்டிருந்தோம். திடிரென்று பத்து மணிக்கு பார்ட்டி கொடுப்பவர் "தம்பிகளா...இந்தப் பார்டிக்கு என்னோட பட்ஜெட் இவ்வளவு தான் " என்று கையை விரித்து விட்டார்.முன்னாடியே சொல்லியிருந்தால் வந்த சுண்டலையாவது கூடக் கொஞ்சம் நொசுக்கி இருப்பேன் என்று எனக்கு ஒரே வருத்தம். பார்ட்டிக்குப் போய் வெற்று வயிற்றுடன் வந்ததற்கப்புறம் இந்தியாவில் இனி தண்ணிப் பார்டிக்கே போகக் கூடாதென்று முடிவு செய்திருந்தேன்.

இங்கே வெள்ளைக்கார தண்ணிப் பார்ட்டியில் இம்சை வேறு மாதிரி. எதிராளி கைய்யில் க்ளாஸ் வைத்திக்கொண்டிருக்கும் போது நாம் வைத்துக் கொள்ளாவிட்டால் மரியாதை குறைச்சல். இதற்காக ஆரஞ்சு ஜூஸாவது வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் துரை ஒரு க்ளாஸ் பியரையோ, காக்டெயிலையோ ஒருமணி நேரமாய் வைத்துக் கொண்டிருப்பார். நானெல்லாம் ஊரில் ஆரஞ்சு ஜூஸ் குடுத்தால் 2 H.P மோட்டார் போட்டு உறிகிற மாதிரி ஒரே உறிஞ்சாக உறிஞ்சி காலியாக்கி விட்டுத்தான் க்ளாஸை கீழே வைப்பேன். மருந்து குடிக்கிற மாதிரி சின்னச் சின்ன சீப்பியாக குடிப்பதற்கு ரொம்பவே முதலில் கஷ்டப் பட்டேன். இப்பொழுது கொஞ்சம் பழகிவிட்டது. இதோடு இன்னொரு கஷ்டம் வேறு இங்கே உண்டு. வந்த புதிதில் துரைமார் பேசுவது வழவழ கொழகொழவென்று ஏற்கனவே ஒரு இழவும் புரியாது, இதில் தண்ணியடித்து விட்டுப் பேசச் சொன்னால் சுத்தம். அத்தோடு இங்கே இருக்கிற பப்புகளில் மாரியம்மன் கோவில் கொடை விழா மாதிரி பாட்டை வேறு அலறவிட்டு விடுவார்கள். குத்து மதிப்பாக "யா யா", "அப்கோர்ஸ்", "கிரேட்", "ஈஸிட்?" "ஓ ரியலி" என்று வரிசைகிரமம் வைத்து சிரித்துக் கொண்டே சொல்லிவிடுவேன். இந்த லட்சணத்தில் துரை நான் பேசுவது புரியவில்லை என்பார். எல்லாம் நேரக் கொடுமைடா...என்று நினைத்துக் கொண்டு "சந்தைக்குப் போனும் ஆத்தா வையும்" என்று கம்பி நீட்டிவிடுவேன்.

இந்த மாதிரி கொடுமைக்காவது தண்ணியடிக்க கத்துக்கனும் என்று ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். புது வருஷ கொள்கைகள் மாதிரி அதற்கும் இன்னும் வேளை வரவில்லை.

Wednesday, May 03, 2006

Party again in London(Hemel Hempstead)

லண்டனில் மீண்டும் பார்ட்டி. இந்த முறை charityக்காக fund raising event-ஆக நடக்க இருக்கிறது. பார்ட்டியில் குத்தாட்டம்,பாம்பு டான்ஸ், பல்லி டான்ஸ் என்று வழக்கமான கலக்கல்களைத் தவிர மேலும் சில ஸ்டால்கள், ஏலம் என்று களை கட்டப்போகிறது. போன தடவை சுஜாதா அம்மணி தலைமையில் பெண்களெல்லாம் சூப்பராக ஆடி ஆண்கள் நடனத்தையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஊதித் தள்ளிவிட்டார்கள். இந்த முறை ஒரு கைப்பார்த்துவிட வேண்டும் என்று "பத்தே நாளில் ப்ரேக் டான்ஸ்" க்ளாஸ் சேர்ந்திருக்கிறேன். இதோடு கும்மியும் குத்தாட்டமும் கொசுறாக சொல்லித் தருகிறார்கள். பார்ட்டி நுழைவு கட்டணம் தலைக்கு £12. அருமையான சாப்பாடு உண்டு. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ப்ரீ. என்னைப் போன்ற குழந்தை மனது கொண்டவர்களுக்கும் £12 தான் என்று சொல்லிவிட்டார்கள்.

இந்த முறை சங்கராபரணம் டான்ஸ் ஆடலாமா சலங்கை ஒலி டான்ஸ் ஆடலாமா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கு. எது ஆடினாலும் சந்திரமுகி ஜோதிகா டான்ஸை விட கேவலமாகத் தான் இருக்கும் என்று வீட்டு அம்மணி க்யாரண்ட்டி தருகிறார். சலங்கை ஒலி கமல் மாதிரி மனதில் வேகமெல்லாம் இருக்கிறது ஆனால் அதை அபிநயமாக மாற்றும் போது தான் எங்கேயோ மிஸ்ஸாகிறது (ஜெயப்பிரதா கூட ஆடினால் தான் ஆட்டமெல்லாம் கரெக்டாக வரும் என்று சொல்லி திரும்பவும் பட்டினி கிடக்க என்னால முடியாதுப்பா)

லண்டன் அருகிலுள்ள Hemel Hempstead-ல் மே இருபதாம் தேதி நடக்க இருக்கிறது. விழா பொறுப்புக்களை "பாட்ஷா" பாலன் கவனிக்கிறார். எதாவது தேறுமா என்று "உன்னால் முடியும் தம்பி" அடியேனும் உதவுகிற மாதிரி நடித்துவருகிறேன். வலைப்பதிபவர்கள் தான் என்று இல்லை, இதில் யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். r_ramn அட் யாகூ.டாட்.காம்-ல் விருப்பமிருப்பவர்கள் தொடர்பு கொண்டால் மேலும் விபரங்களைத் தருகிறேன்.